இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மாலுகு மாகாணத்தில் அம்போனுக்கு வடகிழக்கில் சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:46 மணிக்கு ஏற்பட்டது. 29 கிலோமீட்டர் சுற்றளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பலத்த நிலநடுக்கங்களால் உலுக்கப்பட்டது இப்பகுதி. தற்போதைய நிலநடுக்கத்தால், உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.
"திடீரென்று வீடு நடுங்கத் தொடங்கியபோது நான் எனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தேன்" என்று அம்போனில் உள்ள ஒரு நிருபர் கூறினார்.
"நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது. நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து ஓடிச் சென்றோம், அண்டை வீட்டாரும் தப்பி ஓடுவதைக் கண்டோம். எல்லோரும் பீதியடைந்தனர்." என்றார் அவர்.
கடந்த ஆண்டு, சுலவேசி தீவில் உள்ள பாலுவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
2004 டிசம்பர் 26 அன்று, சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் சுனாமியை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உட்பட இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல் பிராந்தியங்களில், 220,000 பேர் கொல்லப்பட்டனர்.