காற்று மாசுபாடுவதால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்! 'ஷாக்' ரிப்போர்ட்
லண்டன்: காற்று மாசுபடுவதால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைவதாக சர்வதேச எரிசக்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக நாம் பல்வேறு சுவாசப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். வாகனப் புகை, சாலைகளில் பறக்கும் தூசு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுவதை நாம் கண்முன்னே பார்க்கிறோம். ஆனாலும் அதை தடுப்பதற்கு முயற்சி செய்வது இல்லை.
தற்போது காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.
எரிசக்தி மற்றும் மாசுப்பாடு தொடர்பாக சர்வதேச எரிசக்தி கழகம் (ஐஇஏ) இன்று வெளியிட்ட அறிக்கையில், ''உலகளவில் ரத்த அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய 3 காரணிகள் மனித உடல்நலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது.அதனால் ஏற்படும் நோய்களால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில் அடங்குவர்.
அதே நேரத்தில் காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்பில் பாதி அளவு இந்தியா மற்றும் சீனாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் பலியாகின்றனர். சீனாவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவை தவிர இந்தோனேசியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மற்றும் மெக்சிகோவில் காற்று மாசினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதற்கிடையே தற்போதைய நிலை தொடர்ந்தால், காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஆண்டொன்றுக்கு 75 லட்சம் பேர் பலியாவார்கள். இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேரும், சீனாவில் 25 லட்சம் பேரும் மரணம் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2040 ஆம் ஆண்டுக்குள் காற்று மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.