பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 2 பேர் பலி.. டெல்லி, காஷ்மீரிலும் நில அதிர்வால் மக்கள் பீதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
இன்று மாலை 3.58 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெஷாவரில் இருந்து வடக்கே 248 கிமீ தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
சுமார் 200 கிமீ தூரத்திற்கு நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டதாக, ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களான டெல்லி, ஜம்மு காஷ்மீர் போன்றவற்றில் நில அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வு காரணமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். டெல்லி மெட்ரோ ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.