நியூசிலாந்தில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை வாபஸ்
வெலிங்டன்: நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக சுனாமி எச்சரிகை விடுத்தனர். இருப்பினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.
நேற்று காலை 10.33 மணியளவில் தீவு நகரான கிஸ்போர்னிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்நாட்டின் ஒரு பகுதியில் அமைந்துள்ள வடக்கு தீவுகள் முதல் மறுபகுதி முனையில் இருக்கும் தெற்கு தீவுகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டதாக நியூசிலாந்து நிலநடுக்க கண்காணிப்பு சேவை மையம் தெரிவித்துள்ளது.
நிலப்பரப்பில் இருந்து நீண்ட தூரத்திலும், கடலுக்கடியே அதிக ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை என நியூசிலாந்து அரசு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறினார்.