ஓமனில் பயங்கரம்.. பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்ட 6 இந்திய தொழிலாளர்கள்.. மண்ணில் புதைந்து பலி
ஓமன் நாட்டில் 6 இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்தியத் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் கன மழை காரணமாக மண்ணில் சரிவு ஏற்பட்டு உள்ளுக்குள் புதைந்து இவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான 6 பேருமே கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
மஸ்கட்டில் உள்ள சீப் என்ற இடத்தில் ஒரு குடிநீர் திட்டப் பணி நடந்து வருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கன மழை பெய்திருந்ததால் மண்ணில் சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து 6 இந்தியத் தொழிலாளர்கள் மண் சரிந்து புதைந்து விட்டனர்.
இந்த சம்பவத்தில் ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து ஓமன் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இறந்தவர்கள் யார் என்ற விவரத்தை அறிய முயற்சிகள் நடந்து வருவதாகவும் தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இறந்தவர்களின் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து யாருக்கும் சரியாக தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் பூமிக்கு அடியில் 14 மீட்டருக்குக் கீழ் ராட்சத பைப் புதைக்கும் பணி நடந்து வந்துள்ளது. அப்போது அதில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்தான் மண் சரிவில் சிக்கி பலியானதாக சொல்லப்படுகிறது. 12 மணி நேரம் போராடி உடல்களை மீட்புப் படையினர் மீட்டதாக மஸ்கட் டெய்லி செய்தி தெரிவித்துள்ளது.