நேபாளத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 6 பேர் பலி.. பெண் மட்டும் தப்பிய அதிசயம்
காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். அதிசயிக்கத்தக்கவிதமாக பெண் உயிர் பிழைத்தார்.
ஒரு வெளிநாட்டுப் பயணி உட்பட மொத்தம் 7 பேர் இந்த ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டனர். ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது கட்டுப்பாட்டு அறையுடனான கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து தாதிங் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதை அப்பகுதி மக்கள் கண்ணெதிரில் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரை சீனியர் கேப்டன் நிஷ்சல் இயக்கியுள்ளார். அதில் பயணித்து பலியான வெளிநாட்டுப் பயணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் என்று தெரியவந்துள்ளளது.
அவர் பெயர் ஹிரோமி கோமட்சு. வயது 68. அதே நேரம், ஒரு பெண் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஹெலிகாப்டர் தீப்பிடிக்கவில்லை என்பது, அந்தப் பெண் மட்டும் உயிர் தப்ப ஒரு காரணம் என்று தெரிகிறது. மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏறப்பட்டுள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல் ஆகும்.