சபாஷ்டா செல்லக்குட்டி: கொள்ளையர்களை தடுத்த 6 வயது சிறுமி- வைரல் வீடியோ
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 6 வயது இந்திய சிறுமி கோடாரியுடன் வந்த முகமூடி கொள்ளைக்காரர்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லேண்ட் நகரில் வசித்து வருபவர் சுஹைல் பட்டேல். இந்தியரான அவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மகள் சாரா(6). பட்டேலின் கடைக்கு 6 முகமூடி கொள்ளையர்கள் வந்தனர்.
கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அவர்கள் கடை ஊழியர் ஒருவரை தாக்கினர். இதை பார்த்த சாரா ஓடி வந்து ஒரு கொள்ளையனை தடுக்க முயன்றார். கொள்ளையனின் கையில் கோடாரி இருப்பதை பார்த்ததும் சிறுமி அங்கிருந்து ஓடிவிட்டார்.
கடைக்குள் ஓடியவர் அங்கிருந்த தனது தாத்தாவை அழைத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிறுமி சாராவின் துணிச்சல் சம்பவ வீடியோ இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
இது குறித்து சாராவின் தந்தை கூறுகையில்,
என் மகளை நினைத்து பெருமையாக உள்ளது. அந்த சம்பவத்தால் என் மகள் அதிர்ச்சி அடைந்துள்ளார். நீ தைரியமானவள் பயப்படக் கூடாது என்று நாங்கள் அவளிடம் கூறி வருகிறோம் என்றார்.
6 கொள்ளையர்களில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.