கொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து சுதந்திரமான விசாரணை கேட்கும் இந்தியா
ஜெனிவா (சுவிட்சர்லாந்து): 73 வது உலக சுகாதார சபை (WHA) கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தின்படி, கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) அளித்த பதில் குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த கூட்டு முயற்சியை ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, பிரேசில் உட்பட 62 நாடுகள் ஆதரவளித்துள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பது உலகின் பல்வேறு நாடுகளுக்கு இன்னமும் மர்மமாகவே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் விஷயத்தில் சீனா உலக நாடுகளுக்கு போதிய தகவல்களை அளிக்காமல் மறைத்துவிட்டது என்று அமெரிக்கா பகிரங்கமாகவே குற்றம்சாட்டியது.
இதற்கிடையே கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பானது சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அத்துடன் உலக சுகாதார அமைப்புக்கான நிதியை குறைத்தது.
கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் ஸ்பெயின், இத்தாலி.. இந்தியாவை விட குறைவான பாதிப்பு
டிரம்ப் கடும் எச்சரிக்கை
இதுஒருபுறம் எனில் கொரோனா எப்படி பரவியது என்பதை ஆராய விரும்பிய அமெரிக்கா, , தங்கள் நாட்டின் மருத்துவ ஆய்வுக் குழுவினை சீனா அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அத்துடன் ஒரு வேளை வேண்டுமென்றே சீனா வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பியிருந்தால், அவர்கள் அதற்கான விளைவினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார்.
ஆஸ்திரேலியா அழைப்பு
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்கு எப்படி பரவியது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்தி வந்தன. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்தன.
ஐரோப்பா முன்னெடுப்பு
உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான அவற்றின் காலக்கெடு குறித்த விசாரணையை தவிர, பாரபட்சமில்லாத, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை 73 வது உலக சுகாதார சபை (WHA) கூட்டத்தில் வரைவுத் தீர்மானத்தை முன்மொழிந்தன.
சமூகத்தை பாதுகாக்க வேண்டும்
கடந்த மாதம், கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுதந்திர விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியாவாகும். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன், கொரோனா தொற்று பரவலின் வெடிப்பு குறித்த விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.. இந்த விசாரணையானது, இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் இது போன்ற தொற்றுகளிலிருந்து சர்வதேச சமூகத்தினை பாதுகாக்க உதவும் என கூறியிருந்தார்.
62 நாடுகள் கோரிக்கை
இந்த விசாரணைக்கு ஐரோப்பிய ஒன்றியமும் முன்னெடுப்பு செய்தது. இதற்கு ஆஸ்திரேலியா மட்டுமின்றி ஜப்பான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரேசில் மற்றும் கனடா ஆகிய நாடுகளும் தங்களது ஆதரவினை தெரிவித்தன. இதுவரை 61 நாடுகள் ஆதரித்த நிலையில் 62வது நாடாக இந்தியாவும் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று ஆதரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து 62 நாடுகள் சுதந்திரமான விசாரணை நடத்த ஆதரித்துள்ளன. இது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.