ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை
டோக்கியோ: இன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறும் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜப்பான். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இன்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கிழக்கு கடற்கரை அருகேயுள்ள புகுஷிமா மாகாணத்திலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
ரிக்டர் அளவுகோலில் 7.3
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, இரவு 11.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுமார் 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சுனாமி இல்லை
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், கடல் அலைகள் சுமார் 4 முதல் 4.5 மீட்டர்கள் வரை உயரமாக எழும்பும் என்றும் தெரிவித்தனர். தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பான் முழுவதும் நிலநடுக்கம் பரவலான உணரப்பட்டது.
புகுஷிமா அணுமின் நிலையம்
இதன் காரணமாக சுமார் 9.50 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. இருப்பினும். இதுவரை எவ்வித மோசமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. புகுஷிமா பகுதியிலுள்ள அணுமின் நிலையத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு நிலநடுக்கத்தில் புகுஷிமா அணுமின் நிலையம் உருகி, பெரும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவசர ஆலோசனை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, முக்கிய அதிகாரிகளுடன் தனது அலுவலகத்திற்கு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் ஒருங்கிணைக்கவும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் ஒரு சிறப்புத் தொடர்பு அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.