ஜப்பானில் நிலநடுக்கம்..... சீறிய சுனாமி அலைகள்! அணு உலைக்கு பாதிப்பில்லை!!
ஜப்பானின் கிழக்கு கடற்கரை நகரமான ஹோன்சு அருகே இந்திய நேரப்படி நேற்று இரவு 10.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அணுமின்நிலையம் பாதிப்புக்குள்ளான புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அணு உலையில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் சீறிப் பாய்ந்தன. ஆனால் சிறிய சுனாமி அலைகளாக இருந்ததால் அணு உலைக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முதலில் நிலநடுக்கத்தை உறுதி செய்ததையடுத்து ஜப்பான் வானிலை நிறுவனமும் உறுதி செய்தது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகளால் உயிர்ச் சேதமோ,பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது உருவான மிகப்பெரிய சுனாமியினால் புகுஷிமா நகரில் உள்ள அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.