உங்க பிள்ளை தமிழில் "பெயிலானால்" கவலைப்படாதீங்க.. இங்கிலாந்தில் இங்கிலீஷிலேயே பெயிலாகுறாங்களாம்!
லண்டன்: நம்ம ஊரில் தாய் மொழியான தமிழில் பலர் தடுமாறுவதைப் போல இங்கிலாந்தில் முக்கால்வாசிப் பேருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருக்கிறதாம்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். அந்தக் கதைதான் இது. நம் வீடுகளில் தமிழில் போய் இவ்வளவு மார்க் குறைவாக வாங்குகிறாயே. அவமானமாக இல்லையா என்று திட்டும் பெற்றோர் அதிகம். ஆனால் இங்கிலாந்திலும் இதை கதைதான் நடக்கிறதாம்.
இங்கிலாந்தில் பட்டம் பெற்று கல்லூரிகளை விட்டு வெளியேறும் மாணாக்கர்களில் முக்கால்வாசிப் பேர் ஆங்கிலத்திலும், கணக்கிலும் மோசமாக உள்ளனராம்.
நான்கில் ஒருவர் மோசம்
நான்கு பட்டதாரிகளில் ஒருவர் மட்டுமே ஆங்கிலத்திலும், கணிதத்திலும் சிறப்பாக உள்ளனராம். மற்றவர்கள் சராசரியை விட குறைவான மாணவர்களாகவே உள்ளனராம்.
இத்தனைக்கும் செலவு செய்தும்
இத்தனைக்கும் இங்கிலாந்து அரசும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களும் கல்வி்க்காக பெருமளவில் செலவிட்டு வருகின்றனவாம். அப்படி இருந்தும் ரிசல்ட் மோசமாக உள்ளது.
25 சதவீதம் பேர்தான் பெஸ்ட்!
பட்டதாரிகளில் 25 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலத்தில் - இலக்கணம் மற்றும் இலக்கியத்தில் - சிறந்து விளங்குகின்றனராம். 75 சதவீதம் பேர் மோசமாக உள்ளனராம்.
ஜப்பானியர்கள் பரவாயில்லையே
அதேசமயம், ஜப்பானிலும், பின்லாந்திலும் ஆங்கில, கணித அறவில் சிறந்து விளங்குவோர் எண்ணிக்கை தலா 37 சதவீதமாக உள்ளது. நெதர்லாந்து நாட்டவர் 36 சதவீதம் சிறப்பாக உள்ளனர். ஆஸ்திரேலியர்கள் கணக்கு 32 சதவீதம். நார்வே 28, பெல்ஜியம் 26 ஆக இது உள்ளது.
பள்ளிகள் மீதுதான் தவறு
பல்கலைக்கழக மாணவர்களின் இந்த மோசமான ஆங்கில மற்றும் கணித அறிவுக்கு, பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களை சரிவர பயிற்சி தராமல் வெளியேற்றுவதே முக்கியக் காரணம் என்கிறார்கள்.
ஜப்பான் சூப்பர்
ஜப்பானில் பள்ளிப் பருவத்தில் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விடுகிறார்கள். உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் இலக்கியத்திலும், கணிதத்திலும் திறம்பட்டவர்களாக மாறி விடுகிறார்கள். அதன் பின்னர் கல்லூரிக்கு வரும்போது மேலும் மேம்பட்டு விடுகிறார்கள்.
இங்கிலாந்துக்கு பிற நாடுகள் பரவாயில்லை
இங்கிலாந்தை விட மற்ற நாடுகளில் பள்ளிக் கல்வி வலுவாக உள்ளது. இதனால் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் நல்ல ஆங்கில அறிவையும், கணித அறிவையும் பெறும் நிலை உள்ளது. ஆனால் இதில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளதாக ஷெல்சீர் என்ற ஆங்கில நிபுணர் கூறுகிறார்.
வகுப்புகளில் மாணவர்கள் அதிகம்
அதேபோல இங்கிலாந்தில் ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மாணவர்களைச் சேர்க்கின்றனராம். இது வளர்ந்த நாடுகள் வரிசையில் 6வது இடத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்துள்ளது. தற்போது ஒரு வகுப்புக்கு 25 மாணவ மாணவியர் படிக்கின்றனராம். - அடேங்கப்பா, இது பரவாயில்லையே. இந்தியாவில் ஒரு வகுப்புக்கு 40 பேர் வரை அடைத்துப் படிக்க வைக்கின்றனரே!
லக்சம்பர்க்கில் 16 பேர்தான்
லக்சம்பர்க்கில் ஆரம்பப் பள்ளிகளில் வகுப்புக்கு 16 பேர்தான் சேர்க்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் சராசரியாக 21 ஆக இது உள்ளது. இங்கிலாந்தின் தனியார் பள்ளிகளில் 15 பேர் வரைதான் சேர்க்கப்படுகிறார்களாம். அரசுப் பள்ளிகளில் அதிகபட்சம் 26 பேர் வரை சேர்க்கப்படுகிறார்களாம்.
நர்சரியில்
நர்சரி கல்வியைப் பொறுத்தவரை வகுப்புக்கு அதிகபட்சமாக 19 பேர் வரை சேர்க்கின்றனர். வளர்ந்த நாடுகளின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும்.
படிக்கிறார்கள், பாஸ் செய்கிறார்கள்.. அவ்வளவுதான்!
இங்கிலாந்து கல்லூரிகளில் படித்து வெளி வரும் மாணவ, மாணவியர் புத்தகத்தில் உள்ளதை மட்டுமே படித்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையில் திறமைகளை வளர்த்துக் கொள்வோர் எண்ணிக்கை அங்கு குறைந்து வருகிறதாம்.
மெக்காலேயை வச்சே நாம் இந்த ரேஞ்சுக்கு இருக்கோமே....!
இங்கிலாந்தின் மெக்காலே வகுத்துக் கொடுத்த அடிப்படையில்தான் இன்னும் இந்தியாவில் பெரும்பாலான பள்ளிப் பாடங்கள் இருக்கின்றன. அதை வைத்தே நாம் இந்த அளவுக்கு திறமையுடன் இருக்கும்போது அவர் பிறந்த இங்கிலாந்தில் ஆங்கிலம் ததிங்கிணத்தோம் போடுவது ஆச்சரியம்தான்!