பாக். தேர்தலையொட்டி தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்.. வேட்பாளர் உட்பட 75 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இஸ்லாமிய கட்சியினர் தேர்தல் பிரச்சார வாகன பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததில் 70 பேர் பலியாகியுள்ளனர்.
வரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாண வேட்பாளர் சிராஜ் ரைசானி உட்பட 70 பேர் இதில் பலியாகியுள்ளனர். பலுசிஸ்தான் அவாமி கட்சி சார்பில் இவர் போட்டியிட்டார். மேலும், சிராஜ் ரைசானி, பலுசிஸ்தான் மாகாணத்தின் முதல்வராக 2008-13ல் பதவி வகித்த நவாப் அஸ்லம் ரைசானியின் சகோதரர் ஆவார்.
தீவிரவாதிகளால், இவ்வாரத்தில் கொல்லப்பட்ட இரண்டாவது வேட்பாளர் இவராகும். இது மனித வெடிகுண்டு வகை தாக்குதல் என்று போலீசார் கூறுகிறார்கள். ஏற்கனவே இன்று காலை பன்னு பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நவாஸ் ஷெரீப் கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர் அக்ரம் கானை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். பாகிஸ்தானி தாலிபான் தீவிரவாத அமைப்பு அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
ஆக மொத்தம் 75 பேர் இருவேறு தாக்குதல்களில் இன்று கொல்லப்பட்டனர். மேலும் 120க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.