70 வயது மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் தென்னை மரத்தில் ஏறிய 76 வயது தாத்தா
கோலாலம்பூர்: மலேசியாவில் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் 76 வயது முதியவர் தென்னை மரத்தின் மீது ஏறிக் கொண்டு கீழே இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசியாவைச் சேர்ந்த சலிமின் என்ற 76 வயது முதியவருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவருக்கு 70 வயதில் மனைவி உள்ளார். குழந்தைகள், பேரக்குழந்தைகளும் உள்ளனர். அந்த முதியவரின் பேரக் குழந்தைகளுக்கும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அறையை சுத்தம் செய்வதற்காக அவரை வெளியே செல்லுமாறு அவரது மனைவி நச்சரித்துள்ளார். மேலும் சலிமினை அறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
மனைவியின் நச்சரிப்பால் கடுப்பான சலிமின் வீட்டை விட்டு வெளியே வந்தார். அங்கு இருக்கும் 9 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தின் மீது ஏறினார். இதை பார்த்த அவரது மனைவி அவரை கீழே இறங்கி வருமாறு கெஞ்சியும் அவர் கேட்கவில்லை. மரத்தை விட்டு இறங்க மாட்டேன் என்று 3 மணிநேரமாக அங்கேயே இருந்தார்.
அதன் பிறகு வேறு வழியில்லாமல் தீயணைப்பு படைக்கு போன் செய்தார் சலிமின் மனைவி. அவர்கள் வந்து சலிமினை பத்திரமாக கீழே இறக்கினர்.