இந்தோனேசியா ஜாவா தீவில் கரை ஒதுங்கிய 8 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
ப்ரோபோலிங்கோ: இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் 8 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தோனேசியாவில் இப்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான். இவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன.
மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஜூஹூ கடற்கரை, ஒடிசா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் திமிங்கலங்கள் உயிரிழந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பைலட் வகையிலான 8 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்ரை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவர்களும், அரசு அதிகாரிகளும் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இருப்பினும் காலையில் 8 திமிங்கலங்கள் கரையில் இறந்து கிடந்தன.