4 குழந்தைகள் உள்பட 8 கேரளா சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் ஓட்டல் அறையில் மரணம்.. பகீர் காரணம்
காத்மாண்டு: நேபாளத்தில் 4 குழந்தைகள் உள்பட கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலா பயணிகள் ஓட்டல் அறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தின் டாமனில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் காணப்பட்ட 8 இந்திய சுற்றுலா பயணிகள், விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காத்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.
சிலிண்டர் ஹீட்டர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உயிரிழந்த 8 பேரில் 4 பேர் குழந்தைகள் ஆவார். 8 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கேரளாவினர் 15 பேர்
உள்ளூர் தகவல்களின்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு விடுமுறையை கொண்டாட நேபாளம் சென்றிருந்தது. இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்கள் போகாராவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கேஸ் ஹீட்டரால் விபரீதம்
செல்லும் வழியில் நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் உள்ள டாமனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து செல்வதற்காக (பிட்ஸ் ஸ்டாப்) புக்கிங் செய்திருந்தனர், இதன்படி அங்கு சென்ற கேரள சுற்றுலாப் பயணிகள், தங்களை சூடாக வைத்திருக்க, இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை இயக்கியிருந்தனர். இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2500 மீட்டர் உயரத்தில் உள்ள பகுதியாகும். இதனால் தான் விபரீதம் நடந்திருக்கிறது.
மயங்கி கிடந்தனர்
இது தொடர்பாக ஹிமலாயன் டைம்ஸ் பத்திரிக்கையிடம் ஹோட்டல் மேனேஜர் கூறுகையில், வந்திருந்த சுற்றுலா பயணிகளில் எட்டு பேர் ஒரு அறையில் தங்கியிருந்தனர், மீதமுள்ளவர்கள் மற்றொரு அறையில் தங்கியிருந்தனர். ஒரு அறையில் தங்கியிருந்த 8 பேரும் பூட்டப்பட்ட அறையில் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு சென்றோம். அங்கு பரிசோரித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்றார்.
மூச்சுத்திணறலால் சாவு
உயிரிழந்தவர்களின் விவரத்தின் நேபாளத்தின் மக்வான்பூர் காவல் நிலையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபின் குமார் நாயர் (39), சரண்யா (34), ரஞ்சித் குமார் டி.பி. (39), இந்து ரஞ்சித் (34), ஸ்ரீபத்ரா (9), அபிநவ் சூர்யா (9), அபி நாயர் (7) மற்றும் வைஷ்ணவ் ரஞ்சித்(2) ஆகிய 8 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதில் இரண்டு பேர் ஆண்கள், இரண்டு பேர் பெண்க்ள, இரண்ட சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் ஆகியோர் இறந்த போயிருக்கிறார்கள். இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை இயக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்த சம்பவம் நேபாளம் மற்றும் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.