பாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
கராச்சி: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 107 பேருடன் புறப்பட்ட விமானம் கராச்சியில் குடியிருப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்திருக்கிறது.
Recommended Video
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து பிகே 8303 என்ற விமானம் 107 பயணிகளுடன் இன்று கராச்சிக்கு சென்றது. கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கும் போது குடியிருப்புகள் மீது அந்த விமானம் மோதி வெடித்து சிதறியது.
இதனையடுத்து விமான விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதுவரை உருக்குலைந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
என்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி
37 உடல்கள் மீட்பு
இது தொடர்பாக சிந்து மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் அஜ்ரா பெசுகோ கூறுகையில், முதலில் 37 உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தில் 4 பேர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றார். இடிபாடுகளில் இருந்து 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடக்கத்தில் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானும் லாக்டவுனை அமல்படுத்தியிருந்தது. கடந்த 16-ந் தேதி முதல்தான் பாகிஸ்தானில் விமான சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் மேலும் பலரது உடல்கள் விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில் இந்த விமான விபத்தில் மொத்தம் 80 பேர் பலியாகி உள்ளதாக சிந்து மாகாண அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
4 பேர் மீட்பு
இதனிடையே இந்த விமான விபத்தின் இடிபாடுகளில் இருந்து 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் தங்களது உறவினர்களிடம் தொலைபேசியில் பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் பஞ்சாப் வங்கியின் தலைவர் ஜாபர் மசூத்தும் ஒருவர்.
எஞ்சியவர்கள் கதி என்ன?
விமானத்தில் பயணித்த 107 பேரில் 80 மரணித்துவிட்டனர். 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் கதி என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. இடிபாடுகளை முழுமையாக அகற்றிய பின்னர்தான் எஞ்சியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.