உள்நாட்டுப் போர் தீவிரம்... ஏமனில் இருந்து 80 இந்தியர்கள் நாடு திரும்பினர்!
சனா: உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமன் நாட்டில் இருந்து 80 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து சண்டையிட்டு வருவதால் ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து, ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
ஏற்கனவே, ஏமன் அதிபர் நாட்டிலிருந்து வெளியேறி சவுதியில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் தலைநகர் சனா பகுதியில் வான்வழித் தாக்குதல் இரவு நேரங்களில் நடத்தப் படுவதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
ஏமனில் பல்வேறு மாகாணங்களில் சுமார் 3,500க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர்கள் ஆவர். ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடையத் தொடங்கியதுமே அங்குள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
மேலும், அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர இந்தியா 2 கப்பல்களையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், அங்கிருந்து 80 இந்தியர்கள் சனா விமான நிலையத்தில் இருந்து திஜிபவுதி வந்திறங்கினர். பின்னர், அங்கிருந்து அவர்கள் பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.