ரமலான் நோன்பு காலத்தில் உணவு சாப்பிட்டதாக... நைஜீரியாவில் 80 பேர் கைது
ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபுஜா: நைஜீரியாவில் ரமலான் நோன்பு காலத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் இங்கு வாழ்கின்றனர். அந்நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய 'ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள கானோ மாநிலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்ட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரமலான் நோன்பு காலத்தில் விதியை மீறி சாப்பிட்ட காரணத்திற்காக அவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முதல் முறை கைதானவர்கள் என்பதால், அவர்களைப் போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர். மீண்டும் இதே தவறைச் செய்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில், 'ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க 'ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், விதியை மீறும் இஸ்லாமியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற மதத்தினரை தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.