ரொம்ப பசிக்குது... அவசரப் போலீஸுக்கு போன் போட்ட 81 வயது தாத்தா... வாங்கிக் கொடுத்த போலீஸ் அதிகாரி!
நியூயார்க்: அமெரிக்காவில் அவசர உதவிக்கு போன் செய்து பசிக்கின்றது எனக் கூறிய 81 வயது முன்னாள் ராணுவ வீரருக்கு உணவு அளித்து உதவி செய்துள்ளார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர்.
தென்கிழக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெயேட்டேவில்லி பகுதியை சேர்ந்தவர், கிளாரன்ஸ் பிளாக்மோன்(81). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் பெரிதும் சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பினார் கிளாரன்ஸ். வீட்டில் தனியாக இருந்த கிளாரன்ஸுக்கு திடீரென கடுமையான பசி ஏற்பட்டது. உணவுப் பொருட்கள் எதுவும் வீட்டில் இல்லை. சக்கர நாற்காலியில் உலாவி வந்த கிளாரன்ஸால் அக்கம்பக்கத்தாரிடமும் கேட்க இயலவில்லை.
எனவே, விபத்து மற்றும் போலீஸ் அவரசர உதவி சேவை மைய அழைப்பு எண்ணான '911'-ஐ தொடர்பு கொண்ட கிளாரன்ஸ், ‘தனக்கு மிகவும் பசிக்கின்றது. ஏதாவது உதவி செய்ய இயலுமா?' என்று கேட்டார்.
கிளாரன்ஸின் போனை எடுத்த பெண் அதிகாரி, பொறுமையாக அவருக்கு என்ன வேண்டும் என்ற விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் மற்றொரு போலீஸ் அதிகாரி மூலம் கிளாரன்ஸ் கேட்ட உணவுப் பொருட்களை அவர் கொடுத்தனுப்பினார்.
இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என டாக்டர்கள் தேதி குறித்துள்ள நிலையில், தக்க நேரத்தில் தனக்கு உணவளித்த அந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு கிளாரன்ஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.