சீனக் காவல்நிலையம் சூறை: 2 போலீசாரை வெட்டிக் கொன்ற 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பீஜிங்: சீனாவில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே உண்டான மோதலில் இரு போலீசார் உட்பட 9 தீவிரவாதிகள் பலியானார்கள்.
சீன சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டியனன்மென் சதுக்கத்தில், கடந்த 4ம் தேதி மர்மகார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் காரில் வந்த 3 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாவாசி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், படுகாயமடைந்த 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் டியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்து அல்ல, தீவிரவாத தாக்குதல் என்பதை கண்டுபிடித்தனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 8 பேரை பீஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
டியனன்மென் சதுக்கத்தில் நடந்தது தற்கொலை படையினரின் கார் குண்டு தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பீஜிங் மற்றும் சுற்றுப்பகுதி ஓட்டல்களில் தங்கியிருந்த சுற்றுலாவாசிகள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர்.
தாக்குதலை ஏற்படுத்திய கார் சிங்ஜியாங் மாகாணத்தின் பதிவு எண்ணை கொண்டிருந்ததால், சந்தேகத்தின் பேரில் 5 பேரைப் போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள செரிக்புயா நகர போலீஸ் நிலையத்தை கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்த தீவிரவாதிகள் சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அப்போது பணியில் இருந்த 2 போலீசார் வெட்டிக் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து 9 தீவிரவாதிகள் பலியானார்கள்.
மேலும், மோதலில் படுகாயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.