பூமி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு நான் தகுதியானவன்... நாசாவுக்கு 9 வயது பொடியன் கடிதம்
பூமி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு நான் தகுதியானவன் என்று நாசாவுக்கு 9 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளார்.
வாஷிங்டன்: நாசாவால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பூமி பாதுகாப்பு அதிகாரி பணியிடத்துக்கு தான் தகுதியானவன் என்றப 9 வயது பொடியன் கடிதம் எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூமி பாதுகாப்பு அதிகாரி என்ற பணிக்கு நாசாவிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்த இளைஞர்களுக்கும் பூமியை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கொள்ளை ஆசை எழுந்துள்ளது.
என்ன பணி?
வேற்றுகிரகவாசிகளிடமிருந்து பூமியைக் காப்பதுதான் இந்த அதிகாரியின் முக்கியப் பணியாம். மேலும் பிற கிரகங்கள், விண் கப்பல்கள், செயற்கைக் கோள்களிலிருந்து பூமிக்கு ஆபத்து தரும் பொருட்கள் ஏதேனும் வந்தால் அதைத் தடுத்து பூமியைக் காப்பதும் இந்த அதிகாரியின் வேலையாக இருக்கும்.
9 வயது பொடியனிடம் இருந்து கடிதம்
நாசாவின் இந்த அறிவிப்பை அறிந்த நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஜேக் டேவிஸ் என்ற 9 வயது சிறுவன் நாசாவுக்கு ஒரு கடிதத்தை எழுதினான். அதில் தன்னை அண்டத்தின் பாதுகாவலன் என்றும் 4-ஆவது நிலை அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
கடிதத்தில் என்ன?
அந்தக் கடிதத்தில் ஜேக் கூறுகையில், எனது பெயர் ஜேக் டேவிஸ். பூமி பாதுகாப்பு அதிகாரி பணிக்காக விண்ணப்பிக்க எனக்கு விருப்பம். நான் 9 வயது சிறுவனாக இருந்தாலும் நான் அந்த பணிக்கு தகுதியானவன் என்றே கருதுகிறேன். அதற்கு காரணம், என்னை வேற்றுகிரகவாசி என்று என் சகோதரி என்னை அழைப்பார். மேலும் நான் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசிகள் சார்ந்த அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். எனவே என்னால் பூமியை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளான்.
நாசா அதிகாரிகள் ஆச்சரியம்
இந்த கடிதத்தை கண்ட நாசா அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர். பின்னர் நாசாவின் பூமி அறிவியல் இயக்குநர் ஜிம் கிரீன் அந்த சிறுவனுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் அண்டத்தின் பாதுகாவலர் என்பதை அறிந்தேன். மேலும் நாசாவில் பூமி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்ற உங்களது விருப்பத்தை மிக சிறப்பானது. இந்த பணியானது மிகவும் முக்கிய பணியாகும். சந்திரன், எரிகற்கள் மற்றும் செவ்வாய் ஆகியவற்றில் இருந்து மாதிரிகளை நாங்கள் கொண்டு வரும் போது இந்த நுண்ணுயிரிகளிடம் இருந்து பூமியை பாதுகாக்க வேண்டும்.
வருங்கால விஞ்ஞானி
எங்களுக்கு உதவி செய்ய சிறப்பு வருங்கால விஞ்ஞானிகளையும், என்ஜீனியர்களையும் நாங்கள் தேடி வருகிறோம். அதற்காக நீங்கள் கடுமையாக படித்து பள்ளியில் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். வருங்காலத்தில் நீங்கள் நாசாவில் பணியாற்றுவதை பார்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த கடிதத்தில் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.
|
நாசா அதிகாரி பாராட்டு
சிறுவன் ஜேக்கை வாஷிங்டன்னில் உள்ள நாசாவின் தலைமையகத்தில் இருந்து பூமி ஆய்வு இயக்குநர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சிறுவனின் ஆர்வத்தை பாராட்டுவதாக தெரிவித்தார்.
14-ஆம் தேதி கடைசி நாள்
பூமி பாதுகாப்பு அதிகாரிக்கான பணிக்கு விண்ணப்பிக்க வரும் 14-ஆம் தேதி கடைசி தேதியாகும். ஆண்டுக்கு 1,24,406 டாலர் முதல் 1,87,000 டாலர் வரை என ஊதியத்தை நாசா நிர்ணயித்துள்ளது. பொறியியல் பட்டப்படிப்பில் விசாலமான நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். பூமி பாதுகாப்பில் வல்லவராக இருக்க வேண்டும். தனித்து சாதுர்யமான முடிவுகளை எடுக்க வேண்டும் இவைதான் நாசா நிர்ணயித்துள்ள தகுதிகள்.
அதிர்ஷ்டம் யார் வீட்டு கதவை தட்டுகிறது என்பதை பார்ப்போம்.