சகாராவைக் கடக்க முற்பட்டு தாகத்தால் பலியான நைஜர் மக்கள்: மேலும் 92 சடலங்கள் மீட்பு
அகடெசா: சகாரா பாலைவனத்தை கடக்க முற்பட்டு பலியான நைஜீரிய நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாலைவனங்களில் தொடர்ந்து ஆங்காங்கே கண்டெடுக்கப் படும் சடலங்களால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டில் நிலவும் வறுமை காரணமாக, பிழைப்புத் தேடி அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
அந்தவகையில் குழுக்களாகப் பிரிந்து சகாரா பாலைவனம் வழியாக சென்று வருகின்றனர் மக்கள். அவர்களில் கடந்த திங்களன்று 35 பேர் தண்ணீர் இன்றி தாகத்தால் பலியானது தெரிய வந்தது. இந்நிலையில், தற்போது மேலும் 92 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளாதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வறுமை காரணமாக...
ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாட்டின் அகடெஸ் நகரிலிருந்து வறுமை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபுக சஹாரா பாலைவனம் வழியாக பல வாகனங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வாகனத்தில் கோளாறு...
சஹாரா பாலைவனத்தின் மையத்தில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டின் டாமன்ரசட் என்ற நகரை நோக்கி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கால்நடைப் பயணம்...
இதையடுத்து வாகனத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் பெண்கள், குழந்தைகள் என அவர்கள் கால் நடையாக பல்வேறு குழுக்களாக பிரிந்து பாலைவனத்தை கடக்க முயன்றுள்ளனர்.
தண்ணீர் தாகத்தில்....
பல நாட்கள் நூற்றுக்கணக்கான மைல் பாலைவனத்தில் நடந்த அவர்களது உடலில் தண்ணீர் வற்றிய நிலையில் தொண்டை வறண்டு போயுள்ளது. இதனால் உயிருக்கு போராடியவர்கள் குடிக்க தண்ணீரின்றி பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும், பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவத்தினர்...
உயிர் தப்பிய சிலர் மட்டும் எப்படியோ பல நாட்கள் நடந்து, சகாராவைக் கடந்து வழியில் இருந்த அர்லிட் நகரை அடைந்துள்ளனர். பின்னர், நடந்த சம்பவத்தை அவர்கள் அங்குள்ள ராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள்...
அதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், 7 ஆண்கள், 32 பெண்கள், 48 குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் தனித்தனியாகவும், தாயும் குழந்தையுமாக கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பரிதாபம்...
பலியானவர்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய, அல்ஜீரியா நாட்டு எல்லைக்கு அருகில் வெறும் 3 கி.மீ. தூரத்திலேயே இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடரும் மரணங்கள்....
ஏற்கனவே, கடந்த திங்களன்று இதேபோன்று 35-க்கும் மேற்பட்டோர் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.