96.. இதுவும் ஒரு மாதிரி காதல் கதை தான்.. ஆனா எது மேல காதல்னு கேட்டா நிச்சயம் ஆச்சர்யப்படுவீங்க!
96 வயதில் கல்லூரி பட்டப்படிப்பை முடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இத்தாலியில் தாத்தா ஒருவர்.
ரோம்: இத்தாலியில் 96 வயதான முதியவர் ஒருவர், தன்னைவிட 70 வயது குறைந்த மாணவர்களுடன் சேர்ந்து படித்து பல்கலைக்கழகப் பட்டம் வாங்கியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
காலம் கடந்தாலும் நம் ஆசையை, இலக்கை முயற்சி செய்தால் அடைய முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் இத்தாலியைச் சேர்ந்த தாத்தா ஒருவர் செய்த செயலும் இணைந்துள்ளது.
இத்தாலியின் பலேர்மோ பகுதியைச் சேர்ந்தவர் கியூசெப் பட்டர்னோ. தற்போது 96 வயதாகும் இவருக்கு இளமையில் வறுமை, போர் என பல்வேறு காரணங்கள் கல்வியைத் தொடர விடாமல் செய்து விட்டது. ஆனால் ஆண்டுகள் கடந்தாலும் வாழ்க்கை என்பது ஒருமுறை தான் அதில் நமது ஆசைகளை நாம் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கியூசெப்.
"டாக்டர்கள் பஞ்சு திருடுறாங்க.. மருந்து திருடுறாங்க" வீடியோ போட்ட மாரிதாஸ்.. போலீஸில் சரமாரி புகார்
இளமையில் வறுமை
குடும்ப வறுமை காரணமாக சிறுவயதிலேயே கடற்படையில் பணிக்கு சேர்ந்து விட்டார் கியூசெப். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ரயில்வேயில் பணியாற்றினார். தொடர்ந்து வேலை, குடும்பம் என கடமைக்கே நேரம் சரியாக இருந்ததால் அவரால் தனது கல்வியை மீண்டும் தொடர்வது பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
மீண்டும் தடைபட்டது
பிறகு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற கியூசெப் மீண்டும் கல்வியைத் தொடர நினைத்தார். ஒரு வழியாக 90 வயதில் மீண்டும் தனது கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு சில பிரச்சினைகளால் அவரது படிப்பு தடைபட்டது.
தரமான சம்பவம்
ஆனால் விடாமுயற்சியாக மீண்டும் தனது 93வது வயதில் கல்லூரிக்குச் சென்றார். ஒரு வழியாக தனது 96வது வயதில் படித்துப் பல்கலைக்கழக பட்டத்தை வெற்றிகரமாக பெற்று விட்டார் கியூசெப். தன்னைவிட 70 வயது குறைவான இன்றைய தலைமுறை மாணவர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையாகப் படித்து, பட்டம் பெற்றது தான் இங்கு தரமான சம்பவமே.
எதிர்காலத் திட்டம்
‘மூன்று வருட பட்டம் பெறுவதற்கு சற்று தாமதமாகிவிட்டது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் இதனை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அறிவு என்பது நாம் தினமும் எடுத்துச் செல்லும் சூட்கேஸ் போன்றது. அது ஒரு புதையல். புத்தகங்கள் எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதேபோல் நூல்களை படித்து ஆராய்ச்சி செய்யவும் திட்டமிட்டுள்ளேன்' என தனது எதிர்காலத் திட்டம் குறித்து கூறுகிறார் கியூசெப்.
ஆச்சர்யம்
இன்றைய தலைமுறையினரே படிக்கச் சிரமப்படும் பாடங்களை, வயதைப் பொருட்படுத்தாமல் படித்து பட்டம் பெற்றுள்ள கியூசெப்பிற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நம்மூரில் பலர் இளவயதிலேயே இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருக்க, 96 வயதில் படிப்பு மீதான தன் காதலை நிரூபித்து, தன் எதிர்காலத் திட்டங்களை அடுக்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் கியூசெப்.