16 வயது சிறுமி கடத்தல்.. மதம் மாற்றி திருமணம் செய்த 36 வயது இளைஞர்
கராச்சி: பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி அவரை முஸ்லிமாக மதம் மாற்றி 36 வயது இளைஞர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து சிறுமியை பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சிந்து மாகாணத்துக்கு உள்பட்ட நகர்பர்கர் மாவட்டத்தில் உள்ள வரய்னோ கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிதா மேக்வர் (16). இந்து மதத்தை சேர்ந்த அந்த சிறுமியை சையத் நவாஸ் அலி ஷா (36) என்பவர் கடந்த 6-ஆம் தேதி கடத்தி சென்றுவிட்டாராம்.
பின்னர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மதம் மாற்றி பதிவு திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நகர்பர்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தண்டனை குற்றம்
பாகிஸ்தானில் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அந்த சிறுமிக்கு 18 வயதாகி விட்டதாக போலி ஆவணங்கள் தாக்கல் செய்து திருமணம் செய்துவிட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மகளிர் அமைப்புகள் போர் கொடி
இதைத் தொடர்ந்து அந்த சிறுமி கடந்த 2001-ஆம் ஆண்டு பிறந்ததற்கான அனைத்து ஆதாரமும் தங்களிடம் உள்ளதாகவு்ம அவர்கள் தெரிவித்தனர். மேலும் திருமண வயதை எட்டாத பெண்ணை கடத்தி திருமணம் செய்த அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.
என்னை கடத்தவில்லை
இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் அந்த சிறுமி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. சையத்தை நானாக விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
பாதுகாப்பு தாருங்கள்
கணவரிடமிருந்து என்னை பிரிக்கவும், என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவும் எனது பெற்றோர் முயற்சிக்கின்றனர். எனவே எனக்கும் எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை வழக்கு
இந்த வழக்கு வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தங்களது மகளை கடத்திச் சென்று சையத் அலி திருமணம் செய்துவிட்டார் என்றும் தங்கள் மகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் ரவிதாவின் தந்தை சிந்து மாகாண ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இன்று விசாரணை
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சலாவுதீன், கடத்திச் சென்றதாக கூறும் சிறுமி ரவிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ரவிதாவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்று தெரிகிறது.