யூடியூப்பில் ‘சிங்கப்பூர் சிற்பி’ லீ குறித்து அவதூறான வீடியோ பகிர்வு... சிங்கப்பூரில் சிறுவன் கைது!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குறித்து அவதூறான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘சிங்கப்பூர் சிற்பி' எனப் புகழப்படும் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ (91) சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இன்னமும் லீயின் மறைவு சோகத்தில் இருந்து சிங்கப்பூர் மக்கள் மீளவில்லை. இந்நிலையில், அவரது மறைவைக் கொண்டாடும் வகையில் 16 வயது சிறுவன் ஒருவன் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டான். சுமார் 8 நிமிடம் ஓடும் அந்த வீடியோவுக்கு ‘லீ குவான் யூ இறுதி மரணம்' என தலைப்பிடப் பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவ போலீசார் தொடர்பாக அவதூறு பரப்பும் விதமான கருத்துக்களும் அந்த வீடியோவில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அந்த வீடியோ தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனைப் போலீசார் கைது செய்தனர். சட்டச் சிக்கல்கள் காரணமாக கைது செய்யப்பட்ட சிறுவனின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. அதற்குப் பதிலாக, அச்சிறுவனின் பெயரை அமோஸ் யீ என்ற அடைமொழியுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், ‘லீ குவான் யூவை பயங்கரமான மனிதர், அனைவரும் அவரிடம் அச்சுறுத்தலாக இருந்தனர். அவரை பார்த்து பயந்தனர். அவரால் அனைவரும் கஷ்டப்பட்டு வந்தனர்' என அச்சிறுவன் குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
தனி நபர் அல்லது குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் நோக்கத்தோடான கருத்துக்களை பரப்பிய குற்றத்துக்காக சிறுவனுக்கு அந்நாட்டுச் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.