சொக்கா.. சொக்கா.. ஒரே வாரத்தில் ரூ.4¼ கோடி பரிசு.. அமெரிக்க பெண்ணுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்த பாருங்க!
அமெரிக்காவில் ஒரே வாரத்தில ஒரு பெண்ணுக்கு நான்கேகால் கோடி ரூபாய் பரிசு லாட்டரியில் விழுந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே வாரத்தில் ஒரு பெண்ணுக்கு 2 முறை லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. இதனால் ஒரு வாரத்திலேயே அவர் கோடீஸ்வரி ஆகியுள்ளார்.
ஒருவருக்கு நேரம் வந்தால் கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்பார்கள். இந்த பழமொழி அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அசால்ட்டாக பொருந்தியுள்ளது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 முறை லாட்டரியில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் இளம் பெண் திணறி போயுள்ளார். லாட்டரியில் வந்த பணத்தைக் கொண்டு தனக்கு பிடித்த விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்க இருப்பதகா கூறியுள்ளார்.
அதிர்ஷ்டத்தை சோதிக்க..
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ரோசா டோமின்கியூ. இவர் கடந்த வாரம் தனது அதிர்ஷ்ட்டத்தை சோதித்து பார்க்க எண்ணினார்.
5 டாலர்களுக்கு லாட்டரி
இதற்காக அரிசோனா மாகாணத்தில் உள்ள ஒரு லாட்டரி கடையில் தனது 5 டாலர்களை கொடுத்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். இதற்கான பரிசுத்தொகை 5 லட்சத்து 55 ஆயிரம் டாலர் ஆகும்.
2 நாள் இடைவெளியில் மீண்டும்
அதன்பின்னர் 2 நாள் இடைவெளியில் கலிபோர்னியாவின் கேஸ் ஸ்டேஷன் பகுதியில் மீண்டும் ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். இதனுடைய பரிசுத்தொகை 1 லட்சம் டாலர்.
அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்
இந்த நிலையில் அவர் வாங்கிய 2 லாட்டரி சீட்டுகளுக்கும் அவருக்கு பரிசு கிடைத்தது. இதன் மூலம் அவர் 6 லட்சத்து 55 ஆயிரம் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார்.
நான்கேகால் கோடி
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரே வாரத்தில் 2 லாட்டரி சீட்டுகளில் பரிசு பெற்றதன் மூலம் கோடீஸ்வரி ஆகியுள்ளார் ரோசா.
கார் வாங்க போறாராம்
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ரோசா டோமின்கியூ என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடியுள்ளார். தனக்கு கிடைத்திருக்கும் பணத்தை கொண்டு தான் மிகவும் விரும்பும் கார் ஒன்றை வாங்க முடிவு செய்து உள்ளதாக கூறியுள்ளார்.