3 வயது சிறுமியைத் தூக்கிக் கொண்டு பறந்த காத்தாடி.. ஷாக்கான மக்கள்.. தைவான் திருவிழாவில் பரபரப்பு!
தைவான் நாட்டில் காற்றாடி பறக்கவிட்ட சிறுமி காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தைபே: தைவான் நாட்டில் காற்றாடி பறக்கவிட்ட சிறுமி காற்றில் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டின் நன்லியோ கடற்பகுதியில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு விதவிதமான காற்றாடிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். குறிப்பாக ஏராளமான சிறுவர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.
தனது குடும்பத்துடன் திருவிழாவில் பங்கேற்ற 3 வயது சிறுமி ஒருவர், ஒரு பெரிய அளவு காற்றாடியை காற்றில் பறக்கவிட்டு, அதன் கயிற்றை கையில் பிடித்திருந்தாள். அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. இதனால், காற்றாடி மிக வேகமாக பறக்கத் துவங்கியது. சிறுமியால் காற்றாடியை பிடித்து நிறுத்த முடியவில்லை.
காற்றாடி உயரப் பறந்த போது அதனுடன் சேர்ந்து அந்தச் சிறுமியும் மேலே தூக்கிச் செல்லப்பட்டாள். இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, சிறுமியை கீழே இழுக்க முயன்றனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் காற்றாடி நூலை பிடித்தப்படி சிறுமி அந்தரத்தில் தொங்கினாள்.
இது வானவில்லா? வில்லை காணோமே.. வெறும் கோடு தான் இருக்கு.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
சிறிது நேரம் கழித்து காற்றின் பலம் குறைந்ததால் சிறுமி தானாக பூமியில் விழுந்தாள். அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு காயம் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனால் காற்றாடியுடன் சேர்ந்து மேலே தூக்கி செல்லப்பட்டதால் சிறுமி மிகவும் பயந்துவிட்டாள். பின்னர் அவளை ஆசுவாசப்படுத்தி பெற்றோர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காற்றாடி திருவிழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.