டிவிட்டர் நிறுவனத்தில் நிறப் பாகுபாடு... கருப்பர் இன சாப்ட்வேர் என்ஜீனியர் ராஜினாமா
நியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதள நிர்வாகத்தின் நிறப்பாகுபாடான செயல்களை எதிர்த்து லெஸ்லி மைலி என்ற பொறியியல் வல்லுனர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இவர் கருப்பர் இனத்தவர் ஆவார்.
உலகம் முழுவதும் டிவிட்டர் இணையதளத்தை இருபத்தைந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டிவிட்டர் இணையதளத்தில், வேலை செய்வது வெறும் இரண்டே சதவிகித கறுப்பினத்தவரே.
இந்நிலையில், டிவிட்டர் இந்த நிறப்பாகுபாடான செயலை எதிர்த்து ஆப்பிரிக்க அமெரிக்கரான லெஸ்லி மைலி என்கிற பொறியியல் வல்லுனர் தான் வகித்து வந்த உயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
டிவிட்டர் நிறுவனத்தில் வெள்ளை இனத்தவரே உயர் பதவிகளில் அதிகமாக இருக்கின்றனர். டிவிட்டர் நிர்வாகக்குழுவின் பாகுபாட்டை எதிர்த்து ஏற்கனவே கடந்த மே மாதம் மார்க் லக்கி என்ற தகவல்தொடர்பு மேலாளர் தனது பணியிலிருந்து விலகினார். வெள்ளை இனத்தவரே அதிகமாகப் பணிபுரியும் இந்நிறுவனத்தில், வெள்ளையினம் அல்லாதவர்கள் மூன்றே சதவிகிதத்தினர் மட்டுமே பணிபுரிகின்றனர். இது கறுப்பினத்தவர்களுக்கு எதிரான செயலாகும், என்றார்.
மேலும், பன்னிரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான பெண்களே பணியில் உள்ளதா க பியூ ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டிவிட்டர் நிர்வாகம், பன்முகத்தன்மையை மற்ற நிறுவனங்களை விட அந்நிறுவனம் சிறப்பாக கடைபிடித்து வருவதாகக் கூறியுள்ளது.