3 பெயின் கில்லர்கள்.. மயக்க மருந்து கொடுத்து கரப்பான்பூச்சிக்கு சிசேரியன்.. தாயும், சேய்களும் நலம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் கரப்பான் பூச்சிக்கு கால்நடை மருத்துவமனையில் சிக்கலான முறையில் டெலிவரி செய்யப்பட்டு தற்போது தாயும் சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரப்பான்பூச்சி என்றாலே 10 அடி தூரத்துக்கு ஓடுவோர் மத்தியில் அதை நாய், பூனை போல் சிலர் வளர்த்து வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ரஷ்யாவில் ஒரு வீட்டில் கரப்பான்பூச்சியை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்த கரப்பான்பூச்சி ஆர்ச்சிமன்டிரிடா வகையை சேர்ந்தது. இது பெரும்பாலும் தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வசிக்கும். இது 8 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது.
குட்டிகள் ஈன்ற முடியாமல் அவதி
இந்த கரப்பான்பூச்சி கர்ப்பம் தரித்தது. இதையடுத்து பிரசவத்துக்கான நாள் நெருங்கியது. பிரசவத்தின் போது தனது குட்டிகளை ஈன்ற முடியாமல் மிகவும் அவதியுற்றது.
அறுவை சிகிச்சை
இதை கண்ட அந்த வீட்டு உரிமையாளர், உடனடியாக சைபீரியா பகுதியில் உள்ள கிராஸ்னோயார்ஸ்க் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கரப்பான்பூச்சியின் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அதற்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
தாயும் சேயும் நலம்
அப்போது 3 வலி நிவாரணிகளை கொடுத்து மயக்க மருந்துகளையும் செலுத்தினர். பின்னர் அதன் உடலில் இருந்து முட்டை பைகளை அகற்றினர். மிகவும் சிறிய உயிரினமான கரப்பான்பூச்சிக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை செய்ததில் தாயும் சேய்களும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆபத்து
ஒரு வேளை அந்த முட்டை பைகளை அகற்றாமல் இருந்திருந்தால் அந்த கரப்பான்பூச்சிக்கு நோய் தொற்று ஏற்பட்டு அதன் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும் என தெரிவித்தினர்.