மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு- விருந்து!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வரலாற்று சிறப்பு மிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் இன்று 4-வது நாளாக பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு 161 ஆண்டு பழமை வாய்ந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பும் விருந்தும் அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் செய்தார். அப்போது ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி உரை நிகழ்த்தினார்.
இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் லட்சுமண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஆலன்பார்டர், ஸ்டீவாக், மற்றும் பிரெட்லீ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 2015-ல் நடக்க இருக்கும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை பார்வையிட ஆஸ்திரேலியா வருவதாக நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.
அப்போது பேசிய டோனி அப்பாட், நரேந்திர மோடியை தமது சகோதரர் என விளித்தார்.