நாயின் பாசப்போராட்டம்... சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உரிமையாளரை தட்டி, தட்டி அழைத்தது
லிமா: உயிரிழந்த உரிமையாளரின் சவப்பெட்டியின் மீதிருந்து முன்னங்கால்களை அகற்ற, மறுத்த நாய் ஒன்றின் பாசப்போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரு நாட்டின் லீமாவில் நாய் ஒன்றைப் பாசத்தோடு வளர்த்து வந்த உரிமையாளர் திடீரென இறந்துவிட, மறுநாள் கண்ணாடிப் பேழை போன்ற சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது.
தான் ஆசையுடன் துள்ளி விளையாடிய நபர் தற்போது சவப்பெட்டியில் படுத்திருப்பதையும், தனது அழைப்புக்கு திரும்பாததையும் கண்ட அந்த நன்றியுள்ள ஜீவன், சவப்பெட்டியின் கண்ணாடி மீது வைத்த முன்னங்கால்களை அகற்றாமல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. பெண் ஒருவர் அந்த நாயை அகற்ற முயன்றும், பிடிவாதமாக அந்த நாய் நகர மறுத்துவிட்டது.
நன்றிக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரு உயிர் என்றால், உலகில் எந்த மூலை என்றாலும், வரும் முதல் வார்த்தை நாய்தான். வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் மனிதனிடம் அதிகம் நெருங்கியது நாய் தான். இத்தனை பெருமைகளை கொண்ட நாய்களை பெரும் செல்வந்தர்கள் தொடங்கி தினமும் பிச்சையெடுத்து பிழைப்பவர் வரை வளர்க்கின்றனர்.
சொத்துக்காக உறவுகளுக்குள்ளே அடித்துக் கொள்ளும் காலத்தில், தன் உயிரே போனாலும், உரிமையாளருக்கு விசுவசமாக இருக்கும் ஜீவன் என்றால், நாய் தான். அதற்கு உதாரணமாக இருந்தது அந்த காட்சிகள்.