மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இம்மாதம் கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது
பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது கடல் கடந்து பஹ்ரைனில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அதன்படி வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல், மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், மற்றும் ரத்த தான குழு, தொழிலாளர்களின் நலன், வேலை வாய்ப்புகள், குழந்தைளுக்கு தரமான இலவச கல்வியை வழங்க ஒளவையாார் கல்விக்கூடம் உள்ளிட்ட பல சேவைகளை முன்னெடுத்து செய்து வருகிறது
அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு
நெகிழ வைக்கும் மருத்துவ சேவை
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்டம் கடந்த வெள்ளியன்று அதாவது ஜூன் 14ம் தேதியான நேற்று செயல்படுத்தப்பட்டது இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்
பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை,ஆலோசனை
கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். இம்முகாமில் பல் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.
இலவச சேவையால் 5,000 பேர் பலன்
இந்த மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்ட நிகழ்ச்சியின் போது பேசிய சமூகநலத்துறை செயலாளர் நோ.கி. பிரவீன், "மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்" என்ற திட்டம் கடந்த 2017 நவம்பர் மாதம் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. இம்மாதம் வரை மிகச்சரியாக 17 இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றதன் மூலம் சுமார் 5000 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.
சங்கத்தின் செயல்பாடுகளால் பெருமை
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவரான முனைவர். பெ. கார்த்திகேயன் பேசும் போது "உலகிலேயே மாதமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்துவது நமது அமைப்பு மட்டும்தான்" என்று குறிப்பிட்டார். சங்க பொது செயலாளர் க. செந்தில்குமார், மங்கையர் குழு அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் விற்பனை அதிகாரி இராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பெருமை கொள்ளும் விதமாக இருப்பதாக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் உற்சாகத்துடன் கூறினர்