செல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி
ரஷ்யாவில் செல்பி எடுக்க முயன்ற ஒரு சிறுமி 3000 மின் வயரில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ: ரஷ்யாவில் செல்பி எடுக்க முயன்ற ஒரு சிறுமி 3000 மின் வயரில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உழியனோவ்ஸ்க் பகுதியில் அமைந்திருக்கும் கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது தோழிகளுடன் குளிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மேம்பாலத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார்.
பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி திடீரென்று அங்கிருந்து தவறி ரயில் தண்டவாளத்தில் இருந்த மின்சார கம்பியின் மீது விழுந்துள்ளார்.
3000 வோல்ட் மின்வயர்
சுமார் 3000 வோல்ட் மின்சாரம் செல்லக் கூடிய கம்பியின் மீது விழுந்ததால், அந்த சிறுமி துடித்துள்ளார். மின்கம்பியின் மீது எரிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார் அந்த சிறுமி.
தோழிகள் அதிர்ச்சி
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தோழிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் அலறியுள்ளனர். சிறுமி மின்சார வயரில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்த ரயில் ஓட்டுநனர் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை நிறுத்த கோரினார்.
சுயநினைவின்றி அனுமதி
இதையடுத்து அந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சுயநினைவற்ற நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி கவலைக்கிடம்
பலத்த தீக்காயம் அடைந்துள்ள அந்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. செல்பி மோகத்தால் ரயிலில் அடிபட்டும், கடல் மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.