வாவ் வாவ்.. 5 மாடி கட்டிடத்தில் தொங்கிய குழந்தை.. ஸ்பைடர் மேனாக மாறி காப்பாற்றிய மாலி வாலிபர்!
பிரான்சின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உயிருக்கு போராடிக் கொண்டு தொங்கிய குழந்தையை ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.
Recommended Video
பாரிஸ்: பிரான்சின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உயிருக்கு போராடிக் கொண்டு தொங்கிய குழந்தையை ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.
அந்த குழந்தையை காப்பாற்றியது கசாமா என்ற 22 வயது மாலி அகதி. கொஞ்சம் கூட யோசிக்காமல் இவர் வேகமாக மாடியில் ஏறி அந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
இந்த சாதனை வீடியோவாக வெளியாகி, வைரலாகி உள்ளது. இந்த வீடியோ காரணமாக அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
யார் இவர்
கசாமா, மாலியில் இருந்து பிரான்சிற்கு சென்று வேலை தேடி வந்துள்ளார். மாலியில் இருந்து இளைஞர்கள் பலர் இப்படி பிரான்சிற்கு வந்து தங்குவது வழக்கம். சிலர் அங்கேயே அகதி கோரிக்கை அளித்து தங்குவதும் உண்டு. அப்படித்தான் கசாமாவும் அகதி விண்ணப்பம் கொடுத்துவிட்டு, அந்த நாட்டில் வேலை தேடி சுற்றியுள்ளார்.
தொங்கிக் கொண்டு இருந்த குழந்தை
இந்த நிலையில் பாரிஸின் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் வெளியே மக்கள் கூட்டமாக நின்று கத்திக் கொண்டு இருந்துள்ளனர். அது வழியாக இவர் சென்ற போதுதான் அந்த சம்பவம் நடந்துள்ளது. கட்டிடத்தின் 5 மாடிக்கு மேல் பால்கனியில் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டு தொங்கிக் கொண்டு இருந்துள்ளது. ஆனால் அங்கு இருந்த மக்கள் உதவாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். மாடியில் இருந்தவர்களும், எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் குழம்பி உள்ளனர்.
|
ஸ்பைடர் மேன்
இவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் வேகமாக கம்பிகளையும், சுவர்களையும் பிடித்தே மேலே ஏறியுள்ளார். வேக வேகமா ஸ்பைடர் மேன் படத்தில் பீட்டர் பார்க்கர் ஏறுவது போலவே வேகமாக ஏறியுள்ளார். வேகமாக ஏறிய அவர் அப்படியே குழந்தையை ஒரு கையில் பிடித்து தூக்கி காப்பாற்றியுள்ளார். இவர் வேக வேகமாக ஏறும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
குடியுரிமை பெற்றார்
இந்த நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வரை சென்று சேர்ந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உடனே குடியுரிமை வழங்க வேண்டும் என்று இன்று அவர் அறிவித்துள்ளார். அதேபோல் வேலை தேடும் அவர்க்கு பிரான்ஸ் தீயணைப்பு துறையில் நிரந்தர வேலை கொடுக்கவும் ஆணையிட்டுள்ளார். ஒரு வீரதீர செயல் இரண்டு பேரின் வாழ்க்கையை மொத்தமாக மாற்றியுள்ளது.