கார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர்... தேடி,தேடி... 20 வருடத்திற்கு பின் கண்டுபிடித்தார்!
ஜெர்மனியில் கார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர் 20 வருடங்களுக்கு பின் கண்டுபிடித்து இருக்கிறார்.
பெர்லின்: ஜெர்மனியில் கார் பார்க் செய்த இடத்தை மறந்த நபர் சரியாக 20 வருடங்களுக்கு பின் அதை கண்டுபிடித்து உள்ளார். இத்தனை நாளாக அந்த காரை யாரோ திருடிவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 1997ல் 56 வயது முதியவர் ஒருவர் காரை பார்க் செய்துவிட்டு பார்க் செய்த இடத்தை மறந்து உள்ளார். இதனால் அவர் தனது 'போக்ஸ்வோகன்' காரை பார்க்கிங் பார்க்கிங்காக தேடி இருக்கிறார்.
பல இடங்களில் தேடியும் கார் கிடைக்காததால் காரை யாரோ திருடிவிட்டதாக புகார் அளித்து இருக்கிறார். போலீஸ் சில நாட்கள் தேடிவிட்டு பின் கார் கிடைக்கவில்லை என்று புகாரை ஓரம்கட்டிவிட்டது.
இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பின் நேற்று இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது. பெர்லினில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை இடிக்க சென்ற போது அந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது கார் அந்த முதியவரிடம் திருப்பி அளிக்கப்பட்டது. காரை அவர் திரும்ப பெற்ற போது அவருக்கு 76 வயது முடிந்து உள்ளது. ஆனால் இந்த காரின் நிலை மோசமாக இருப்பதால் அதை இனி யாரும் ஓட்ட முடியாது என போலீஸ்காரர்கள் தெரிவித்துள்ளனர்.