குரங்கு எடுத்த செல்பிக்கெல்லாம் எப்படிங்க காப்பிரைட் தர முடியும்.. கோர்ட் மறுப்பு
நியூயார்க்: தானே எடுத்த புகைப்படமாக இருந்தாலும், குரங்கிற்கு அதன் பதிப்புரிமையைத் தர இயலாது என புகழ்பெற்ற குரங்கு செல்பி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டு அங்குள்ள நருடோ என்ற ஆண் குரங்கைப் பற்றி அவர்கள் விபரம் சேகரிக்கச் சென்றனர்.
அப்போது வனவிலங்குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரான டேவிட் ஜே.ஸ்லேடர் என்பவர் தனது கேமராவை வைத்து விட்டு அருகில் சென்றிருந்தார். அப்போது அதனை கையில் எடுத்த நருடோ, வனப்பகுதி, மற்ற குரங்குகள் என புகைப்படங்களாக எடுத்துத் தள்ளியது. கூடவே தன்னையும் புன்னகையுடன் செல்பி எடுத்துக் கொண்டது நருடோ.
கேமராவில் இந்தப் புகைப்படங்களைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஸ்லேடர், அவற்றை ஊடகங்களில் வெளியிட்டார். அந்தப் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது.
இந்நிலையில், இந்தப் புகைப்படங்களுக்கு ஸ்லேடரோ அல்லது அவரது நிறுவனமோ உரிமை கோர இயலாது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா சான்பிரான்சிஸ்கோ நிறுவனத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அதில், "பதிப்புரிமை சட்டத்தின்படி, தான் எடுத்த செல்பி புகைப்படத்துக்கு பதிப்புரிமை கோர நருடோவுக்கு உரிமை உள்ளது. எனவே, ஸ்லேடருக்கு பதிப்புரிமையை வழங்கக்கூடாது" என பீட்டா தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நருடோ எடுத்த புகைப்படங்களுக்கான உரிமையை அதற்கு வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.
காரணம் பதிப்புரிமை சட்டம் விலங்குகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு பதிப்புரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.