கணவனால் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண்.. 8 வருடங்களுக்கு பின் மறுமணம் செய்து திரும்பிய அதிசயம்!
பாகிஸ்தானில் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது உயிருடன் வந்துள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து போனதாக கருதப்பட்ட அஸ்மா பீபி என்ற பெண் தற்போது உயிருடன் வந்துள்ளார். அதோடு அவர் நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்மாவின் முதல் கணவர் இபார் அஹமது இதுகுறித்து போலீசில் வழக்கு பதிந்துள்ளார்.
இபார்தான் அஸ்மாவை கொன்றார் என்று ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அஸ்மா உயிருடன் திரும்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009ல் நடந்த திருமணம்
பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப்பில் வசித்து வரும் அஸ்மாவிற்கும், இபாருக்கும் கடந்த 2009ல் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் நடந்ததில் இருந்தே இவர்கள் இருவருக்கு இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2010ம் வருடம் அஸ்மா மர்மமான முறையில் காணாமல் போனார்.
இறந்துவிட்டார்
அஸ்மா கொலை செய்யப்பட்டுவிட்டதாக கூறி இபார் போலீசால் கைது செய்யப்பட்டார். பின் கோர்ட் மூலம் அஸ்மாவின் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில் அஸ்மாவின் தந்தை இபாரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார். அஸ்மா இறந்த வழக்கும் அப்படியே முடித்து வைக்கப்பட்டது.
மீண்டும் வந்துள்ளார்
இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பின் அஸ்மா, நீலம் என்று பெயரை மாற்றிக் கொண்டு மீண்டும் அவர் ஊருக்கே வந்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதலன் நசீர் அகமது என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்துள்ளார். அவர்கள் துபாயில் இவ்வளவு வருடம் வசித்துள்ளார். வீட்டை விட்டு 8 வருடங்களுக்கு முன்பு ஓடியதாக கூறியுள்ளார்.
புகார்
அந்த பெண்ணுக்கு 6 குழந்தைகள் வேறு பிறந்துள்ளது. தற்போது இந்த பெண்ணின் மீது கணவனை ஏமாற்றுதல், முறையற்ற இரண்டாவது திருமணம் என்ற நிறைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. முதல் திருமணத்திற்கு முன்பே நசீரை காதலித்ததாக அஸ்மா கூறியுள்ளார்.