கருப்பு நிற காரில் ராணி எலிசபெத்... அருகில் சென்று ஏமாந்து போன இங்கிலாந்து பத்திரிகையாளர்கள்!
ராணி எலிசபெத்தின் மெழுகுச்சிலையைக் கொண்டு நடத்தப்பட்ட குறும்பு சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
லண்டன்: இளவரசர் வில்லியம்ஸுக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை பார்க்க எலிசபெத் ராணி காரில் வந்தது போல் செய்யப்பட்ட குறும்பு விளையாட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரனும், சார்லஸ் - டயானா தம்பதியின் மகனுமான இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டனுக்கு கடந்த திங்கள்கிழமை லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் மூன்றாவது குழந்தை பிறந்தது. வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த குழந்தையும் ஆண் குழந்தையாகும்.
கேட் மிடில்டன் மூன்றாவது குழந்தையை பிரசவித்தபோது, தமது இரண்டு மகன்கள், ஜார்ஜ் மற்றும் சார்லட் ஆகியோருடன் இளவரசர் வில்லியம்ஸும் செயின்ட் மேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே, கணவர் வில்லியம்ஸுடன் கேட் மிடில்டன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார்.
இன்ப அதிர்ச்சி:
இங்கிலாந்து நாட்டு அரசக் குடும்பத்தின் வாரிசு பிறக்கப்போவதையொட்டி, திங்கள்கிழமை மீடியாக்களும், பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்தனர். அப்போது, யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் மருத்துவமனை வளாகத்துக்குள் கருப்பு நிற சொகுசு கார் ஒன்று வந்து நின்றது. காரை பார்த்த மீடியாக்களும், மக்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். காரணம், காரின் உள்ளே எலிசபெத் ராணி அமர்ந்திருந்தார்.
மெழுகுச்சிலை:
கொள்ளுப் பேரனை பார்ப்பதற்காக ராணி வந்திருக்கிறார் என நினைத்து, கேமராக்களை தூக்கிக்கொண்டு மீடியாக்காரர்கள் காருக்கு அருகில் ஓடினர். அருகில் சென்று பார்த்தப்போது தான் தெரிந்தது, காரின் உள்ளே இருந்தது ராணி எலிசபெத்தின் மெழுகுச்சிலை என்பது. இதனால் மீடியாகக்காரர்களும், மக்களும் ஏமாற்றத்துடன், சிரித்துக் கொண்டே மருத்துவமனைக்கு திரும்பினர்.
அச்சு அசலான சிலை;
எலிசபெத் ராணியைப் போல அச்சு அசலாக செய்யப்பட்டிருந்த அந்த மெழுகு சிலை அனைவரையும் ஏமாற்றி விட்டது. ஆனால் யார் இந்த குறும்பு விளையாட்டை விளையாடியது என தெரியவில்லை.
|
வைரல் வீடியோ;
எலிசபெத் ராணியின் மெழுகுச்சிலை காரில் உட்கார்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக உலா வந்துக்கொண்டிருக்கிறது.
எலிசபெத் ராணி:
பொதுவாக அரச குடும்பத்துக்கு வாரிசு பிறக்கப் போகும் செய்தி இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகும். ஆனால் இந்தமுறை எலிசபெத் ராணியின் மெழுகுச்சிலை தான் பரபரப்பான பேச்சுப் பொருளாகி இருக்கிறது.