மசக்கையா இருந்தா மாங்கா சாப்பிடுவாங்க, ஊறுகாய் சாப்பிடுவாங்க.. இந்தம்மா சோப்பு சாப்பிடுதே!
லண்டன்: மசக்கையாக இருக்கும் கர்ப்பிணிகள் புளிப்பாக மாங்காய், ஊறுகாய் வகையாறாக்களை சாப்பிடுவார்கள், ஆனால் கட்டி கட்டியாக சோப்பு சாப்பிடுகிறார் ஒரு கர்ப்பிணி. சிக்கன் சாண்ட்விச் போல அவர் சோப்பு சாப்பிடுவதைப் பார்த்து கணவர் ஆச்சரியத்தில் வாயை பிளக்கிறார்.
ஜெஸ் கேபோர்டு என்ற பெண்மணிதான் இப்படி சோப்பையும் சோப் ஆயிலையும் சாப்பிடுகிறார். 26 வயதாகும் அந்த பெண்மணி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஒருநாள் தற்செயலாக சோப்பின் சுவையை ருசி பார்த்து விட்டார் அதிலிருந்து விடாது கருப்பாய் இப்படி சோப்பை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கணவர் லீ தனது கர்ப்பிணி மனைவிக்கு சோப் வாங்கிக் கொடுத்தே அலுத்துவிட்டதாம்.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் ஜெஸ். தனது அம்மாவின் செயலைப் பார்த்து அந்த சிறுவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லையாம்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஹார்மோன் மாற்றம் காரணமாகவே இதுபோன்ற பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் மண், சாம்பல், ஏன் சில கர்ப்பிணிகள் பெயிண்ட் போன்ற பொருட்களையும் கூட சாப்பிடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.