அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்- மேலும் ஒரு இந்தியர் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடருகிறது. சியாட்டிலில் சொந்த நாட்டுக்கு திரும்பச் செல்லுமாறு கூறிய மர்மநபர் ஒருவர் சீக்கியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சியாட்டில்: அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து அரங்கேறுகிறது. சியாட்டிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சீக்கியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சியாட்டிலின் கென்ட் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்மித் சிங் (39) வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த முகமூடி ஆசாமி ஒருவர் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு எச்சரித்துவிட்டு துப்பாக்கியால் சுட்டார்.
காயமடைந்த ஜெஸ்மித் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்மை சுட்ட மர்ம நபர் 6 அடி உயரமாகவும், முகமூடி அணிந்திருந்ததாகவும் ஜெஸ்மித் சிங் தெரிவித்தார். இதுதொடர்பாக கென்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் பணியாற்றிய ஹைதராபாதைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கூறிய மர்ம நபர் ஒருவர் கடந்த வாரம் அவரை சுட்டுக் கொன்றார். அதேபோல் கரோலினா பகுதியில் தொழிலதிபர் ஹர்னிஷ் பட்டேல் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த இனவெறித் தாக்குதல்களை தடுத்து நிறுத்தாமல் அதிபர் டிரம்ப் வெறும் கண்டனம் மட்டுமே தெரிவித்து வருவது அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே அதிருப்தியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.