ஆஹா, இப்படியும் ஒரு நாடா? அதிக நேரம் வேலை பார்த்ததால் வேலை பறிக்கப்பட்ட ஊழியர்.. கோர்ட்டில் கேஸ்
காட்டலோனிய தலைநகர் பார்சிலோனாவில் ஒரு நபர் மிகவும் அதிகமாக வேலை பார்த்த காரணத்தால் வேலையில் இருந்து தூக்கப்பட்டு இருக்கிறார்.
பார்சிலோனா: புதிதாக உருவாகி இருக்கும் காட்டலோனியா நாட்டின் தலைநகர் பார்சிலோனாவில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அங்கு ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்த நபர் மிகவும் அதிகமாக வேலை பார்த்த காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.
10 மணிக்கு ஆரம்பிக்கும் வேலைக்கு 8 மணிக்கே வந்து இவர் மிகவும் நேர்மையாக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் எல்லோரும் சென்ற பின் கடைசியாக இவர் பணி முடித்து திரும்பி இருக்கிறார். 12 வருடமாக இப்படி கஷ்டப்பட்டு வேலை பார்த்த இவர் தற்போது பணியை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து தற்போது இவர் தனது 'முன்னாள் பாஸ்' மீது வழக்கு தொடுத்து இருக்கிறார். இந்த வழக்கு தற்போது பார்சிலோனா நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
பார்சிலோனாவில் நேர்மையின் சிகரம்
புதிதாக உருவாக்கி இருக்கும் காட்டலோனியா நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள பெரிய பல் பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து வந்தார் ஜேன். மிகவும் நேர்மையான நபரான இவர் காலையில் 10 மணிக்கு திறக்கும் கடைக்கு 8 மணிக்கே வந்து அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து இருக்கிறார். அதேபோல் மாலையில் அதிகமாக வேலை செய்துவிட்டு கடைசியாக வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். இதைபோல் இவர் கடந்த 12 வருடங்களாக வேலை செய்து இருக்கிறார்.
பணியில் இருந்து தூக்கப்பட்டார்
இந்த நிலையில் அதிகமாக இவர் வேலை செய்வதை பார்த்த இவரது நிறுவனத்தின் தலைவர் இவரை வேலையை விட்டு நீக்கி இருக்கிறார். மேலும் 12 ஆண்டுகள் வேலை பார்த்ததற்கு எந்த விதமான சன்மானமும் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இவர் பணியை விட்டு நீக்கப்பட்டது அங்கு வேலை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பார்சிலோனாவில் வழக்கு தொடுத்தார்
இந்த நிலையில் அவரது நிறுவன தலைவரின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஜேன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் "நான் மிகவும் கடினமாக வேலை செய்கிறேன் என்பதால் என்னை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். இனி நான் என்ன வேலை பார்ப்பேன் என்று தெரியவில்லை. எனக்கு வரவேண்டிய பணமும் சரியாக வரவில்லை'' என்றும் புலம்பி இருக்கிறார்.
வேறு காரணம் சொன்ன நிறுவனம்
இந்த நிலையில் இவரை வேலையை விட்டு தூக்கியதற்கு அந்த நிறுவனம் வேறு காரணத்தை கூறியிருக்கிறது. அதில் ''இவர் அலுவலகத்தின் விதிமுறைகளை மீறிவிட்டார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தை விட மிக அதிகமாக வேலை பார்த்து இருக்கிறார். அது அலுவலகத்தில் பலருக்கு இடைஞ்சலாக இருந்திருக்கிறது'' என்று காரணம் கூறியிருக்கிறார்கள். இந்த விதிமுறை தனக்கு தெரியாது என ஜேன் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.