என்னை மன்னித்து விடுங்கள்.. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. வினோத திருடனின் வேண்டுகோள்!
திருடிவிட்டு மன்னிப்பு கடிதமும் எழுதிவைத்துள்ளார் ஒருவர்.
அமெரிக்கா: பூட்டை உடைச்சோமோ, இருக்கிறத அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆனோமா-ன்னுதான் எல்லா களவாணிகளும் இருப்பார்கள். ஆனால் அமெரிக்கா முழுவதும் ஒரு வித்தியாசமான திருடனை பத்தி தான் பேச்சா இருக்கு.
கனெக்டிகட் நகரில் ஒரு சர்ச் இருக்கு. இந்த சர்ச்சில் கடந்த 19-ம் தேதி கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் மேல மதிப்பிலான ஆடியோ மற்றும் வீடியோ பொருட்கள் களவு போயின.
இதனால் ஷாக் ஆன சர்ச் நிர்வாகம், இந்த திருட்டு குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தது. அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இப்போது போலீஸ் தரப்பில் ஒரு சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.
அந்த காட்சியில், நள்ளிரவு 1 மணி. ஒரு திருடன சர்ச்சுக்குள் நுழைகிறான். அவன் முகம் முழுவதும் ஒரே சோக மயம். உள்ளே நுழைந்த திருடன், அங்கிருந்த பொருட்களை திருடி கொள்கிறான். பின்னர் கிளம்பும்போது ஒரு கடிதம் எழுதுகிறான். அதில், "என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே... என்னைக் காப்பாற்றுங்கள்; எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று எழுதிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.
செய்த காரியமோ திருட்டு, அதுவும் சர்ச்சில். திருடியது மட்டுமில்லாமல் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு, தனக்காக பிரார்த்தனை வேறு செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்த திருடனை பற்றிதான் ஒரே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் எல்லாத்தையும் விட ஆச்சர்யம் என்னவென்றால், திருடன் கேட்டுக் கொண்டபடி அவனுக்காக தேவாலயத்தில் பிரார்த்தனையும் நடத்தப்பட்டதாம்!