வலுவான டிஜிட்டல் வரி முறைக்கான அடித்தளமாக ஆதார், ஜிஎஸ்டி அமையும்.. இன்போசிஸ் தலைவர்
லண்டன்: இந்தியாவின் வலிமையான டிஜிட்டல் வரி முறையை உருவாக்குவதற்கான அடித்தளமாக ஆதார் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அமையும் என்று இன்போசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி கூறியுள்ளார்.
லண்டனில் யுகே- இந்தியா மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் 18ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 22ம் தேதி வரை நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இன்போசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி பேசுகையில், இந்தியா மிகப் பெரிய ரிஸ்க்குகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு ஆதார் எண், ஜிஎஸ்டி போன்றவை அவசியம். வலிமையான டிஜிட்டல் வரி முறைக்கு நாடு மாற இவை உறுதியான அடித்தளமாக அமையும்.
அவர் பேசுகையில், இந்தியா மாபெரும் ரிஸ்க்குகளை எடுக்க வேண்டும். பல பெரும் வாய்ப்புகள் நமக்காக காத்துள்ளன. அவற்றை அடைய நாம் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பல முக்கிய ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அவையெல்லாம் இந்தியாவுக்கு உதவும் என்றார் அவர்.
இந்தியா ஐஎன்சி நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான மனோஜ் லத்வா தனது வரவேற்புரையின்போது, இந்தியா - இங்கிலாந்து உறவு பலப்படுத்தப்பட வேண்டும். இந்த மாநாடு, இரு நாட்டு உறவுகளை மேலும் சிறப்பானதாக்கவும், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் உதவும். உலகின் மிகச் சிறந்த திறமையாளர்கள் இரு நாடுகளிலும் உள்ளனற். இதை நாம் அப்படியே இனியும் வைத்திருக்க முடியாது. அடுத்த மாற்றத்துக்கு நாம் மாற வேண்டும். அதற்கு இந்த மாநாடு உதவும் என்றார்.
இந்த இரு நாள் மாநாடு, புதிய கண்டுபிடிப்புகளை ஏற்பதும், அதை பொருத்தமான முறையில் பயன்படுத்துவதிலும் செய்யப்படவேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளது. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறவுள்ளன. பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்கின்றனர்.