அமெரிக்காவின் அலபாமாவில் நிறைவேறிய கருக்கலைப்பு தடை மசோதா.. மீறினால் மருத்துவருக்கு சிறை
அலபாமா: அமெரிக்க நாட்டிலுள்ள மாகாணமான அலபாமாவில் கருவை கலைப்பதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேறியுள்ளது. இதற்கு பெண் உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டுக்கு முன் வரை பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்ட விரோதமாக பார்க்கப்பட்டது. பெண் உரிமை ஆர்வலர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு உச்சநீதிமன்றம், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்ற தீர்ப்பின்படி அமெரிக்காவிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. இந்நிலையில் 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார்
இவரோட சரக்கு, மிடுக்கு பேச்சு.. ஆஹா.. நாகரீகத்தின் உச்சம்.. திருமாவை வறுத்தெடுத்த எச் ராஜா!
சொன்னதை செய்த ட்ரம்ப்
ட்ரம்பின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ட்ரம்ப். ட்ரம்ப் அதிபரான பிறகு அவர் இருக்கும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக இருக்கும் மாகாணங்களில் எல்லாம் கருக்கலைப்பு செய்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. கடந்த ஓராண்டில் மட்டும் அந்நாட்டின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கீழ் மற்றும் மேல்சபைக்கு சென்ற மசோதா
அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழு தடைவிதிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியின் இறுதியாக கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது கீழ்சபை மற்றும் மேல்சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது விதி இதற்காக முதலில் கடந்த மாதம் கீழ்சபைக்கும் சமீபத்தில் மேல்சபைக்கும் அனுப்பப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது
ஆதரவும் எதிர்ப்பும்
முதலில் கருக்கலைப்பு தடை மசோதா மீது கீழ்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன. எனவே கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இந்த மசோதா அலபாமா மாகாண மேல்சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு இந்த மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.
கையெழுத்திடுவாரா பெண் கவர்னர்
தற்போது, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் ஆளுநரான கெய் இவேவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர் இந்த மசோதாவில் கையெழுத்திடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இவர் கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிரானவராக அறியப்படுகிறார்
சிக்கினால் மருத்துவருக்கு தான் ஜெயில்
இந்த மசோதா கையெழுத்தாகி சட்டமானால், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஆபத்து நேரிட்டாலோ அல்லது பலாத்காரத்தின் மூலம் கர்ப்பமடைந்தாலோ மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும்.வேறு எதற்காகவாவது கருக் கலைப்பு செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கருக்கலைப்பு செய்யும் மருத்துவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதே சமயம் கருக்கலைப்பில் ஈடுபடும் பெண் குற்றவாளியாக கருதப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.