டாக்டர் சவிதா மரணம் எதிரொலி... 6 ஆண்டுகளுக்குப் பின் மாறும் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்!
கருக்கலைப்புக்கு ஆதரவாக பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதிப் புரட்சி என அயர்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
டப்ளின்: கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதை அமைதி புரட்சி என அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வர்ட்க்கர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இதனால், கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா, உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாததால் பரிதாபமாக உயிரிழந்தார். இது அயர்லாந்தில் மட்டுமின்றி, இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அரசின் முடிவு:
சவிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக அனைத்து மக்களின் கருத்தையும் அறிய அந்நாட்டு அரசு முடிவெடுத்தது.
வாக்குகள் பதிவு:
அதன்படி, நேற்று இது தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின.
எதிர்பார்ப்பு:
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாகக் கூறுகின்றன. அயர்லாந்து தேசிய தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், கருக்கலைப்புக்கு ஆதரவாக 69.4 சதவீதம் மக்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஐரிஷ் டைம்ஸ் வாக்கெடுப்பில் 68 சதவீதம் பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்திற்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் பெருமிதம்:
இந்நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லியோ வர்ட்க்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் எட்டாவது சட்டதிருத்தத்தை ஆதரித்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளது அமைதி புரட்சி. மக்கள் தங்களது உணர்வுகளை வாக்குகளின் வழியாக பிரதிபலித்துள்ளனர். அந்த முடிவுகள் அபாரமானவை' எனத் தெரிவித்துள்ளார். லியோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.