நதியில் மூழ்கிய படகு... மியான்மரில் சோகம்... 50 பேர் பலி; 21 பேர் மாயம்
ரங்கூன்: மியான்மரின் ராகினே நகரில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாயமான 21 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் கடற்கரை நகரமான டவுங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி நேற்று முன்தினம் படகு ஒன்று சென்றது. அந்தப் படகில் 214 பயணிகள் பயணம் செய்தனர். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்த படகு, மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக திடீரென கவிழ்ந்தது.
மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய 167 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரை காணவில்லை. இந்த விபத்தில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அளவுக்கு அதிக அளவில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம். மியான்மரில் படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய, பழமையான மற்றும் கூட்டநெரிசல் மிகுந்த கப்பல்களில் பயணம் செய்வதே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.