ஃபேஸ்புக்கில் கார் போட்டோ போட்டதற்காக ஆஸி. பெண் அபுதாபியில் இருந்து நாடு கடத்தல்
அபுதாபி: ஃபேஸ்புக்கில் ஒருவரைப் பற்றி தவறாக பேசியதாகக் கூறி அபுதாபியில் வசித்து வந்த ஆஸ்திரேலிய பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோடி மேகி(39) கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தார். கிராபிக் கலைஞரான அவர் கடந்த பிப்ரவரி மாதம் அபுதாபியில் தான் தங்கியிருந்த அபார்ட்மென்ட் முன்பு மாற்றுத்திறனாளிகள் கார் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த காரை புகைப்படம் எடுத்து அதன் பதிவு எண்ணை மறைத்துவிட்டு அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இது குறித்து காரின் உரிமையாளரான எகிப்தைச் சேர்ந்த நபர் மேகி மீது போலீசில் புகார் அளித்தார். ஒருவரைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறாக பேசியதாகக் கூறி மேகிக்கு ரூ.2.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபாரதத் தொகையை செலுத்த சென்ற இடத்தில் மேகி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் மேகி இது குறித்து தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது,
என்னை ஆடையை அவிழ்த்து சோதனை செய்தனர், என ரத்தத்தை பரிசோதித்தனர். வெறும் தரையில் என்னை தூங்க செய்தனர். ஒரு காரின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதற்காக எனக்கு அபராதம் விதித்து நாடு கடத்தியுள்ளனர். ஆனால் சிறையில் நான் சந்தித்த பெண்களின் கதையை கேட்டு மனம் நொந்து போயுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.