காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக.. அபுதாபி தமுமுக தீர்மானம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரி அபுதாபி தமுமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அபுதாபி : அபுதாபியில் நடந்த மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவில், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லியுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபுதாபி மண்டல தமுமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹரிப் தொழுகைக்கு பிறகு முஸாபா சனையா பகுதியில் மண்டல தலைவர் அபுல்ஹசன் அவர்கள் தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கியது.
இந்நிகழ்வில் மவ்லவி முகைதீன் அன்வாரி அவர்கள் கிராஅத் ஓதினார். மண்டல தாவாக்குழு பொறுப்பாளர் சர்தார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல செயலாளர் சேக்தாவுது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
மண்டல நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அமீரக தமுமுக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் அவர்கள் பல ஆலோசனைகளை வழங்கியதோடு நிர்வாகிகளின் கடமையும், பண்புகளும் என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார்.
மண்டல துணைச்செயலாளர் ஜஹாங்கீர் அவர்கள் நன்றியுரையோடு இறுதி துஆவோடு கூட்டம் முடிவுற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
வருகின்ற ரமலானில் மே மாதம் 26ம் தேதி இப்தார் நிகழ்ச்சியை சென்ற வருடத்தைவிட இன்னும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ICAD சிட்டியில் புதிய கிளை துவங்க அமைப்புக்குழு உறுப்பினர்களாக முஹம்மது மன்சூர் மற்றும் ஹாஜி அலி ஆகியோர் செயற்குழுவால் நியமனம் செய்யப்பட்டனர்.
மேலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.