ஆஸிட் தாக்குதலுக்குள்ளாகி குணமடையும் புகைப்படங்களை தைரியமாக பகிரும் பெண்
கடந்த ஜூன் மதம் ஆஸிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான ரெஷாம் கான், தான் குணமாகி வருகின்ற புகைப்படங்களை முதல்முறையாக ஈத் பெருவிழாவை கொண்டாடுவதற்கு பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய 21வது பிறந்தநாளின்போது லண்டனில் அவருடைய உறவினர் ஒருவரால் கார் ஜன்னல் வழியாக ரெஷாம் ஆஸிட் தாக்குதலுக்கு உள்ளானார்.
தான் குணமடைந்து வருவது பற்றி ரெஷாம் சமூக ஊடகங்களில் எழுதி வந்துள்ளார். ஒரு வலைப்பூவையும் தொடங்கி எழுதி வருகிறார்.
வர்த்தகம் படிக்கின்ற மாணவியான ரெஷாம் தன்னுடைய இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது பற்றியும். பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் படிக்க செல்வது பற்றியும் உரையாடியுள்ளார்.
ரெஷாம் மற்றும் அவருடைய உறவினர் 37 வயதான ஜமீல் முக்தார் இருவரை உடலளவில் காயப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதாக 25 வயதான ஜான் தாம்லின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். படுகாயமடைந்த ஜமீல் முக்தார் இன்னும் தீவிர காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரெஷாம் நவம்பர் மாதம் ஸ்நாரெஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் ரெஷாமின் வலைப்பூவில், மனதளவில் உற்சாகமாகவும், சோர்வாகவும் இருந்ததாகவும், தோல் ஒட்டுகளுக்கு தேவையானவற்றை உடல் ரீதியாக கையாண்டு, "வடுக்களை தடுப்பதற்கு" சிறப்பு ஆடைகளை அணிந்ததாகவும் பகிரப்பட்டுள்ளது.
புகைப்படங்களை பகிர விரும்பாத நேரங்களை பற்றியும் அவர் எழுதியிருந்தார்.
இந்த வலைப்பூவில் எழுத தொடங்கியதில் இருந்து, ஆஸிட் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னர் முதல்முறையாக, ரெஷாம் குணமாகிவரும் புகைப்படத்தை முதல்முறையாக பகிர்ந்துள்ளார்.
"நீங்கள் அனைவரும் நான் மோசமாக இருந்ததை பார்த்திருக்கிறீர்கள், எனவே, நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றபோது என்னுடைய புகைப்படத்தை வெளியிட விரும்புகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"என்னை பொறுத்தமட்டில், நான் அழகாக தோன்றுவது என்பது என்னுடைய கண்கள் சாதாரணமாக தோன்றும்போதுதான். நான் கையாண்டு கொண்டிருக்கும் தோலின் நிறம், நான் மூடிக்கொள்ளக்கூடிய அல்லது சிகிச்சை அளிக்கப்படும் வடுக்களை பொறுத்து இந்த அழகு அமையும்" என்கிறார் அவர்.
"எனக்கு பல தெரிவுகள் உள்ளன. இருப்பினும், எப்போதும் நான் புகைப்படம் எடுத்து வருகிறேன். ஒரு நாள் நான் என்னுடைய உடல் ரீதியாக குணமடைந்துள்ளதை இந்த காலவரிசையில் பகிர்ந்துகொள்ளும் நிலை வரலாம் என்று ரெஷாம் தெரிவித்திருக்கிறார்.
தான் குணமடைந்து வருவதை வலைப்பூவில் பகிர்ந்த கொள்வதை தவிர, ஆஸிட் வீச்சு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசோடு இந்த மாணவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
உள்துறை அமைச்சகத்தோடு பேசியிருக்கும் ரெஷாம் 35 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.
லண்டனில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆய்வு செய்யப் போவதாக மாநகராட்சி காவல்துறை ஆணையாளர் கிரெஸ்ஸிடா டிக் உறுதி அளித்திருக்கிறார்.
ரெஷாம் பெயரில் தயாரிக்கப்பட்ட "உரிமம் இல்லாமல் ஆஸிட் விற்பதை தடை செய்ய வேண்டும்" என்ற மனுவில் இதுவரை ஐந்து லட்சம் பேருக்கு அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிற செய்திகள்
- 'நீட்' தேர்வு: பலன் தருமா போராட்டங்கள்?
- மருமகளை தாக்குவதற்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற தம்பதி!
- மியான்மர் ரொஹிஞ்சா நெருக்கடி: ஆங் சான் சூ சி ஏன் செயல்படமாட்டார்?
- மூத்த பத்திரிகையாளர் கௌரி லிங்கேஷ் சுட்டுக்கொலை
- குண்டர் சட்டத்திலிருந்து மாணவி வளர்மதி விடுவிப்பு