கத்தாருக்கு எதிரான நடவடிக்கை பின்னணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்? பரபரப்புத் தகவல்கள்
கத்தார் நாட்டின் மீதான வளைகுடா நாடுகளின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிராம்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் வள ஏற்றுமதி நாடான கத்தார் மீது, மற்ற வளைகுடா நாடுகளின் திடீர் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபு நாடுகளில் அதிக எரிவாயு வளம் கொண்ட நாடுகளில் கத்தார் நாடும் ஒன்று. இந்த நாட்டுடன் அரபு நாடுகளான சவூதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்து கத்தாரை தனிமைப்படுத்தியுள்ளன.
ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் மேற்கொண்டுள்ளன. தூதரக உறவு துண்டிக்கப்பட்டதால் அந்த நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தும் அதிர்ச்சியூட்டியுள்ளன.
கத்தார் விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டின் தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொண்டது. இதனால் கத்தார் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டிரம்பே காரணம்
இந்த நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான கத்தார் மீது மத்திய கிழக்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்குத் தாமே காரணம் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அந்த வட்டாரத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய வான்வழி படைத்தளம் கத்தாரில் உள்ளது.
உரைக்குப் பலன்
இருப்பினும், சவூதி அரேபியாவுக்கான தமது அண்மைப் பயணத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தாம் ஆற்றிய உரைக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியிருப்பதாகத் டிரம்ப் கூறியுள்ளார்.
தேவை ஒற்றுமை
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானுடன் நேற்று டெலிபோனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வளைகுடா நாடுகளிடையே ஒற்றுமை தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் ' இரு தலைவர்களும் தீவிரவாத அமைப்புகளின் நிதியுதவியைத் தடுப்பது குறித்து முக்கியமாக விவாதித்தனர் மற்றும் இப்பிராந்தியத்தில் எந்த நாடும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை ஏற்று கொள்ளக்கூடாது என பேசினர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும்
அதே நேரத்தில் பென்டகன் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'அமெரிக்க அதிபர், மத்தியக் கிழக்கு நாடுகளின் பயணத்தின் போது இஸ்லாமிய நாடுகள் ஒருங்கிணைந்து தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதை மத்திய கிழக்கு நாடுகள் நிறுத்தவேண்டும் என்றுதான் பேசினார்' என்று கூறியுள்ளனர்.
கத்தார் மட்டும் நிறுத்தவில்லை
மேலும், சவூதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்த நிதியுதவியை நிறுத்திவிட்டன என்றும் கத்தார் மட்டும்தான் நிறுத்தவில்லை என்றும் அரபு நாடுகள் புரிந்துகொண்டு, அதன்மீது நடவடிக்கை எடுத்துள்ளன என்றும் பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே உறவுச் சிக்கல்கள்
ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு இடையே பல்வேறு ராஜாங்க உறவுச் சிக்கல்கள் உள்ளன என்றும், அவற்றை காரணமாக வைத்தே கத்தார் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது என்றும் தெரிகிறது.
நியூசிலாந்து கருத்து
கத்தார் மீதான இப்போதைய நடவடிக்கை மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள நியூசிலாந்து, ' கத்தார் நாட்டின் தனிப்பட்ட நபர்கள் இப்போதும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். என்பதைக் கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து அவர்களின் சொத்துக்கள் முடக்கம், வாங்கிக்கணக்குகள் மீது தடை உள்ளிட்ட நவடிக்கைகளை கத்தார் அரசு எடுத்துள்ளது. ஆனால் அவை போதாது இன்னும் நிறைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது ,' என்று கருத்துக் கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவம் முகாம்
இந்த நிலையில், கத்தாரில் அமெரிக்க விமானப்படை ஒன்று தனியாக முகாமிட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது குறித்து பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், ' கத்தாரில் அமைதியை ஏற்படுத்தவே அமெரிக்க ராணுவம் முயற்சிக்கிறது. அதற்காக உள்ள தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ' என்று கூறியுள்ளனர்.
ஆயுதங்கள் வாங்குங்கள்
அதிபர் ட்ரம்ப் தனது பயணத்தின்போது சவுதியில் வைத்து கத்தாரின் மன்னர், ஷேக் தமீம் பின் அஹமத் அல் தனியிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். அப்போது நமது இரு நாடுகளின் நட்புறவு நீடிக்கும் என்றும் ஆயுதங்கள் வணிகம் மேம்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தச் செய்தியை பெண்டகன் மறுத்துள்ளது.
சவுதி ஆயுதம் வாங்கியுள்ளது
ஜிசிசி அமைப்பில் உள்ள சவூதி அரேபியா, தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவுடன் மற்ற நாடுகளுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. அதனடிப்படையில், 110 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஆயுதங்கள் வாங்கியுள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு கத்தார் உதவி
நீண்ட காலமாக தமது அண்டை வளைகுடா நாடுகளுடன் கத்தார் முரண்பட்ட நிலையில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு உதவிகள் நிறைய செய்துள்ளது. அவர்களின் ஊடகமான அல்ஜசீரா மீடியாவுக்கு நிதியுதவி அளித்தது கத்தார். இதையெல்லாம் கருத்தில் கொண்டே கத்தார் மீது உறவுத் துண்டிப்பு நடவடிக்கையை வளைகுடா நாடுகள் எடுத்துள்ளன.
ஈரானை தனிப்படுத்த வேண்டும்
இந்த மாதிரியான குழப்பங்கள் ஈரான் நாட்டைத் தனிமைப்படுத்த உதவும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார். வளைகுடா நாடுகளின் சகோதரத்துவம் இப்போது தீவிரவாத இயக்கங்களின் பிடியில் உள்ளது. இது பற்றி பாரிஸ் நகரத்தில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சவுதி அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடில் அல் ஜூபிர் கூறுகையில், " ஹமாஸ் அமைப்பை கத்தார் ஆதரித்தது. அதனால் மற்ற வளைகுடா நாடுகளும் அவ்வாறே செயல்படவேண்டுமா? " என்று கூறியுள்ளார்.
துருக்கி சமாதானம்
துருக்கி நாடு வளைகுடா நாடுகளுக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்றுள்ளது. ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் கத்தார் நாட்டு அதிகாரிகள், " திட்டமிடப்பட்ட நிலையில் கத்தார் மீது ராஜாங்க ரீதியிலான உறவுத் துண்டிப்பு நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆனால் கத்தார் அமெரிக்கா எதிர்பார்க்கும் நிலையில் இல்லை" என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள், அமெரிக்கா- சவுதி அதிகாரிகள் மத்தியில் நடந்த மின்னஞ்சல் உரையாடல்களையும், அவர்களின் கூட்டு நடவடிக்கையால் இது நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.